இடஒதுக்கீடு கொள்கையை தவறாக பயன்படுத்துபவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் -ஐகோர்ட்டு தீர்ப்பு


இடஒதுக்கீடு கொள்கையை தவறாக பயன்படுத்துபவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் -ஐகோர்ட்டு தீர்ப்பு
x

அரசு வேலைக்காக இடஒதுக்கீடு கொள்கையை தவறாக பயன்படுத்துபவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்று ஐகோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.

சென்னை,

திருப்பூர் மாவட்டம், அவிநாசியைச் சேர்ந்தவர் பாலசுந்தரம். இவர், இந்து கொண்டா ரெட்டி என்ற எஸ்.டி. சாதிச்சான்றிதழை அளித்து 1982-ம் ஆண்டு கோவை வன மரபியல் நிறுவனத்தில் கலாசியாக பணிக்கு சேர்ந்தார். 1999-ம் ஆண்டு இளநிலை எழுத்தராக பதவி உயர்வு வழங்கப்பட்ட நிலையில் அவரது சாதிச்சான்று மாநில அளவிலான ஆய்வு குழு ஆய்வுக்கு அனுப்பப்பட்டது.

இந்த குழு நடத்திய விசாரணையில், பாலசுந்தரத்தின் சகோதரரும், சகோதரியும் வேறு சாதி பெயரை குறிப்பிட்டு சாதிச்சான்றிதழ் வைத்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து, பாலசுந்தரத்தின் சாதிச்சான்றிதழை ரத்து செய்தது. இதன் காரணமாக கடந்த 2020-ம் ஆண்டு ஓய்வுபெற்ற பாலசுந்தரத்தின், ஓய்வு காலப்பலன்களும் நிறுத்தப்பட்டன.

ரத்து சரிதான்

இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் அவர் வழக்கு தொடர்ந்தார். அதில், 40 ஆண்டுகளுக்கு முன்பு வழங்கப்பட்ட தனது சாதிச்சான்றை தற்போது ஆய்வு செய்து ரத்து செய்தது தவறு என்று கூறியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் வேலுமணி, ஹேமலதா ஆகியோர், "மனுதாரர் மட்டும் கொண்டா ரெட்டி என்ற எஸ்.டி. சாதிச்சான்றிதழை வைத்துள்ளார். அவரது மகள் ரெட்டி (கஞ்சம்) என்று சாதிச்சான்றிதழ் வைத்துள்ளார். சொந்த சகோதரரும் அதே சாதி சான்றிதழ்தான் வைத்துள்ளார். அதுமட்டுமல்ல, சகோதரி வேறு ஒரு சாதிச்சான்றிதழ் வைத்துள்ளார். இதன்மூலம், மனுதாரர் சாதிச்சான்றிதழை ரத்து செய்தது சரிதான்'' என்று தீர்ப்பு அளித்துள்ளனர்.

நியாயம் இல்லை

மேலும் அந்த தீர்ப்பில், "பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவில் இடஒதுக்கீடு கொள்கை பெருமைக்குரிய ஒன்று. அரசு வேலைக்காக இடஒதுக்கீடு கொள்கையை துஷ்பிரயோகம் செய்பவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். போலி சாதிச்சான்றை கண்டறிய தாமதம் ஏற்பட்டதை காரணம் காட்டி, மனுதாரர் இடஒதுக்கீடு கொள்கையை துஷ்பிரயோகம் செய்ததை நியாயப்படுத்த முடியாது. வழக்கை தள்ளுபடி செய்கிறோம்'' என்று தீர்ப்பு அளித்துள்ளனர்.


Next Story