கல்வி உதவித்தொகையை விரைந்து


கல்வி உதவித்தொகையை விரைந்து
x

மத்திய, மாநில அரசுகளின் கல்வி உதவித்தொகையை விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு கலெக்டர் ஸ்ரீதர் உத்தரவிட்டுள்ளார்.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

மத்திய, மாநில அரசுகளின் கல்வி உதவித்தொகையை விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு கலெக்டர் ஸ்ரீதர் உத்தரவிட்டுள்ளார்.

கலந்தாய்வு கூட்டம்

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்குவது குறித்து துறை சார்ந்த அலுவலர்களுடன் கலந்தாய்வு கூட்டம் நேற்று நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் பி.என்.ஸ்ரீதர் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

உதவித் தொகை வழங்கும் திட்டத்தில் பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.2½ லட்சத்திற்குள் இருக்கும் ஆதிதிராவிட மற்றும் பழங்குடியினர் அல்லது மதம் மாறிய ஆதிதிராவிடர் இனத்தை சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு அரசின் கல்வி உதவித்தொகை வழங்க உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். குமரி மாவட்டத்திற்குட்பட்ட மாணவ, மாணவிகள் போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித் தொகை பெற 4 ஆயிரத்து 499 மாணவ, மாணவிகள் புதுப்பித்தலுக்கும், 2 ஆயிரத்து 156 மாணவ, மாணவிகள் புதிதாக விண்ணப்பிக்கவும் தகுதியுடையவர்கள் என கணக்கிடப்பட்டுள்ளது.

மாணவர்களுக்கான உதவித்தொகை

மத்திய, மாநில அரசுகளின் உதவித்தொகையை மாணவர்களுக்கு தங்கு தடையின்றி வழங்க விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும், போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித் தொகை விண்ணப்பிக்கும் கடந்த காலமுறையில் சிலமாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி tn.adtwo.gov.in.index.php எனும் இணையத்தின் மூலம் கல்லூரிகள் முதலில் தனது குறிப்புகளை உரிய ஆவணங்களுடன் பதிவு செய்ய வேண்டும். இப்பதிவேற்றத்திற்கு கல்லூரிகளுக்கு ஏஐசிஎச்இ கோடு மிக அவசியம். பின்னர் மாணவர்கள் தங்கள் ஆதார் மூலம் தங்கள் சுயவிவரங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். பதிவேற்றம் நிறைவு பெற்றால் மட்டுமே மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை மத்திய, மாநில அரசுகளின் மூலம் பெற முடியும்.

குமரி மாவட்டத்தில் உள்ள மொத்தம் 6 ஆயிரத்து 655 மாணவர்களில் இதுவரை 339 பேர் மட்டுமே முழுமையாக பதிவு செய்துள்ளனர். இத்திட்டத்தை விரைவுபடுத்தி அனைத்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர்கள் பயன்பெறும் வகையில் துறைசார்ந்த அலுவலர்கள் செயல்பட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் நாகராஜன் உள்பட அதிகாாிகள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story