மோகனூர் அருகே விபத்தில் தொழிலாளி சாவு

மோகனூர்:
மோகனூர் அருகே உள்ள மணப்பள்ளி ஊராட்சி சென்னாக்கல்புதூரை சேர்ந்தவர் சேகர் (வயது 50). கூலித்தொழிலாளி. இவர் கடந்த 22-ந் தேதி மோகனூரில் இருந்து தனது மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார். கிராயூர் பகுதியில் சென்றபோது அவர் நிலைதடுமாறி மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தார். அந்த வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக நாமக்கல்லில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக அவர் திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சேகர் பரிதாபமாக இறந்தார். தகவல் அறிந்த மோகனூர் போலீசார் சேகர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.






