ஏரியூர் அருகே பரபரப்பு:கார் மோதி 2½ வயது குழந்தை பலிஉடலை சாலையில் வைத்து உறவினர்கள் மறியல்


ஏரியூர் அருகே பரபரப்பு:கார் மோதி 2½ வயது குழந்தை பலிஉடலை சாலையில் வைத்து உறவினர்கள் மறியல்
x
தினத்தந்தி 5 Aug 2023 7:00 PM GMT (Updated: 5 Aug 2023 7:00 PM GMT)
தர்மபுரி

ஏரியூர்:

ஏரியூர் அருகே கார் மோதி 2½ வயது குழந்தை பலியானது. கார் டிரைவரை கைது செய்யக்கோரி குழந்தையின் உடலை சாலையில் வைத்து உறவினர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கார் மோதியது

தர்மபுரி மாவட்டம் ஏரியூர் அருகே உள்ள பெரும்பாலை 7-வது மைல் பகுதியை சேர்ந்தவர் பிரசாந்த். இவருக்கு திருமணமாகி மனைவியும், 2½ வயதில் ரோஷன் என்ற ஆண் குழந்தையும் இருந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை ரோஷன் வீட்டின் முன்பு விளையாடி கொண்டிருந்தான்.

அப்போது அந்த வழியாக வந்த கார் ஒன்று ரோஷன் மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த அவனை பெற்றோர் மற்றும் உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக பென்னாகரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

சாலை மறியல்

இந்த நிலையில் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி குழந்தை ரோஷன் பரிதாபமாக இறந்தான். இதையடுத்து குழந்தையின் உடல் பிரேத பரிசோதனை செய்து பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து நேற்று காலை பெற்றோர் மற்றும் உறவினர்கள் குழந்தையின் உடலை கட்டிலில் வைத்து கொண்டு பெரும்பாலை 7-வது மைல் பகுதியில் உள்ள பென்னாகரம்- மேச்சேரி சாலையில் திரண்டனர்.

பின்னர் குழந்தையின் உடலை சாலையில் வைத்து தாங்களும் அமர்ந்து கொண்டு திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

போக்குவரத்து பாதிப்பு

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற பென்னாகரம் மற்றும் பெரும்பாலை போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது விபத்தை ஏற்படுத்திய கார் டிரைவரை கைது செய்யக்கோரியும், போலீசாரின் மெத்தன போக்கை கண்டித்தும் அவர்கள் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து போலீசார் குழந்தை மீது மோதிவிட்டு நிற்காமல் காரில் சென்ற நபர் விரைவில் கைது செய்யப்படுவார் என்று உறுதியளித்தனர். இதில் சமாதானம் அடைந்த அவர்கள் மறியலை கைவிட்டு குழந்தையின் உடலை எடுத்து கொண்டு அடக்கம் செய்ய சென்றனர். இந்த சாலை மறியல் காரணமாக பென்னாகரம்-மேச்சேரி சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.


Next Story