'ஆசிரியர் பணியின் நோக்கமே கல்வி போதிப்பதுதான்' ஐகோர்ட்டு கருத்து


ஆசிரியர் பணியின் நோக்கமே கல்வி போதிப்பதுதான் ஐகோர்ட்டு கருத்து
x

மாணவர்களுக்கு கல்வியை போதிப்பது தான் ஆசிரியர் பணியின் நோக்கமே தவிர, வசதியான இடத்தில் பணி பெறுவது அல்ல என சென்னை ஐகோர்ட்டு கருத்து தெரிவித்து உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கைக்கு அதிகமாக ஆசிரியர்கள் பணியாற்றினர். இதனால், உபரி ஆசிரியர்களை வேறு பள்ளிகளுக்கு இடமாறுதல் செய்து அரசு உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து, அப்பள்ளியில் பணியாற்றிய கணித ஆசிரியர் துரைராஜ், புவியியல் ஆசிரியர் சிங்காரவேலு, அறிவியல் ஆசிரியர் புவனேஸ்வரி ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் தனித்தனியாக வழக்குகள் தொடர்ந்தனர்.

இடமாற்றம்

இந்த வழக்குகள் நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, இடமாற்றம் தொடர்பாக அரசு பல்வேறு காலகட்டங்களில் அரசாணைகள் பிறப்பித்துள்ளன. அதற்கு முரணாக தங்களை இடமாற்றம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே அந்த உத்தரவுகளை ரத்து செய்து தொடர்ந்து திருத்துறைப்பூண்டி பள்ளியில் பணியாற்ற அனுமதிக்க வேண்டும் என்று மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

ஆசிரியர் பணியின் நோக்கம்

இந்த வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

ஆசிரியர்களின் சேவை வேறு பள்ளிகளுக்கு தேவைப்படும் பட்சத்தில் அதை மனமுவந்து ஏற்றுக்கொண்டு தாமாக அப்பள்ளிகளுக்கு இடமாறுதல் பெற்று செல்ல வேண்டும்.

தேவைப்படும் மாணவர்களுக்கு கல்வியும், திறமையும் போதிக்க வேண்டியது தான் ஆசிரியர் பணியின் நோக்கமே தவிர, தனக்கு வசதியான இடத்தில் பணி பெறுவது அல்ல.

தற்போது இடமாறுதலுக்கான கலந்தாய்வுக்கு மனுதாரர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கலந்தாய்வில் மனுதாரர்கள் நிவாரணம் பெறலாம். தற்போது எந்த நிவாரணமும் வழங்க முடியாது.

இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.


Next Story