குழந்தை பிறப்பது எப்படி...? ஆபாச பாடம் நடத்திய அக்கவுண்டன்சி ஆசிரியர் போக்சோவில் கைது


குழந்தை பிறப்பது எப்படி...? ஆபாச பாடம் நடத்திய அக்கவுண்டன்சி ஆசிரியர் போக்சோவில் கைது
x

ஆசிரியர் கிறிஸ்துதாஸ் மீது போக்சோ உள்ளிட்ட இரு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த குளச்சல் அனைத்து மகளிர் போலீசார் அவரை கைது செய்தனர்.

கன்னியாகுமரி

கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் பகுதியில்அரசு மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது . இந்த பள்ளியில் 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை உள்ளது. இங்கு சுமார் 1500-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவியர்கள் பயின்று வருகின்றனர். இந்த நிலையில் அந்த பள்ளியில் அக்கவுண்டன்சி பிரிவில் 11-ம் மற்றும் 12-ம் வகுப்பிற்கு அக்கவுண்டன்சி பாடம் நடத்தும் ஆசிரியர் கிறிஸ்துதாஸ் என்பவர் வகுப்பறையில் மாணவர் மாணவிகளுக்கு ஆபாச வகுப்பு நடத்தி வந்ததாக குற்றசாட்டுகள் எழுந்தது. மாணவர்களை வெளியே அனுப்பிவிட்டு மாணவிகளிடம் அவர் ஆபாசமாக பேசி வந்ததாக கூறப்படுகிறது.

மாணவிகளுக்கு சம்பந்தமில்லாத வகையில் ஆபாசமாக பேசி முகம் சுளிக்கும் வகையில் செக்ஸ் பாடம் நடத்தி வருகிறார். வகுப்பறையில் அவரை எதிர்த்து கேள்வி கேட்கும் மாணவ, மாணவிகளிடம் தலைமை ஆசிரியரிடம் கூறி மாற்று சான்றிதழ் தர வைத்து விடுவேன் என்று மிரட்டுகிறார்.

இந்த சம்பவம் குறித்து மாணவிகள் தங்கள் பெற்றோரிடம் தெரிவித்த நிலையில் குளச்சல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது. ஆனால் ஆசிரியர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படும் நிலையில்

கடந்த 6-ம் தேதி பள்ளிக்கு வந்த மாணவிகளின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பள்ளி தலைமை ஆசிரியர் அறையை முற்றுகையிட்டு ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்ந்து வாக்கு வாதம் நடைபெற்று வந்த நிலையில் அங்கு வந்த தக்கலை கல்வி மாவட்ட அதிகாரி எம்பெருமாள் ஆசிரியரிடம் விசாரணை நடத்தினார். ஆனால் ஆசிரியர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில் நேற்று மாணவர்கள் மற்றும் பெற்றோர் மாவட்ட போலீஸ் சூப்பிரெண்டு அலுவலகத்தில் ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகாரளித்தனர்.

இந்த நிலையில் ஆசிரியர் கிறிஸ்துதாஸ் மீது போக்சோ உள்ளிட்ட இரு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த குளச்சல் அனைத்து மகளிர் போலீசார் அவரை கைது செய்தனர்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவிகள் கூறும்போது, "ஆசிரியர் கிறிஸ்துதாஸ் எப்போதும் இரட்டை அர்த்தத்தில்தான் வகுப்பு நடத்துவார். குழந்தை பிறப்பது எப்படி என்பது பற்றி பச்சையாக பாடம் எடுப்பார். அப்போது யாராவது முகம் சுழித்தால் 'நீங்க எல்லாம் அப்பிடித்தான் வந்தீங்க' எனச் சொல்லுவார் என கூறி உள்ளனர்.


Next Story