வாய்ப்பாடு சொல்லாததால் 3-ம் வகுப்பு சிறுமியின் காதை கிழித்த கணக்கு ஆசிரியை - குமரியில் பரபரப்பு


வாய்ப்பாடு சொல்லாததால் 3-ம் வகுப்பு சிறுமியின் காதை கிழித்த கணக்கு ஆசிரியை - குமரியில் பரபரப்பு
x
தினத்தந்தி 26 Jan 2024 3:13 AM GMT (Updated: 26 Jan 2024 4:07 AM GMT)

குளச்சலில் வாய்ப்பாடு சொல்லாததால் சிறுமியின் காதை கணக்கு ஆசிரியை கிழித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

குளச்சல்,

குளச்சல் துறைமுகத்தெருவை சேர்ந்த மீன்பிடி தொழிலாளியின் 9-வயது மகள் அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த சிறுமி நேற்று முன்தினம் மாலையில் வகுப்பு முடிந்து அழுதபடி வீட்டுக்கு வந்தார். இதை பார்த்த தாயார் சிறுமியிடம் 'ஏன் அழுகிறாய்?' என விசாரித்தார். அதற்கு சிறுமி, வகுப்பில் 6-ம் வாய்ப்பாடை முறையாக சொல்லாததால் கணக்கு ஆசிரியை தன்னை அடித்து துன்புறுத்தி காதை கிழித்ததாகவும், அந்த காயத்தில் மருந்து போட்டு வீட்டுக்கு அனுப்பியதாகவும் கூறினார்.

இதைகேட்டு அதிர்ச்சி அடைந்த தாயார் பள்ளி நிர்வாகத்தினரிடம் புகார் செய்தார். அவர்கள் இதுதொடர்பாக நடவடிக்கை எடுப்பதாக கூறி அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து சிறுமியின் தாயார் சமூக வலைத்தளத்தில் ஒரு ஆடியோ வெளியிட்டுள்ளார். அந்த ஆடியோ வைரலாக பரவி வருகிறது. இந்த சம்பவம் குறித்து குளச்சல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

குமரியில் வாய்ப்பாடு சொல்லாததால் சிறுமியின் காதை கணக்கு ஆசிரியை கிழித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story