சுதந்திர தினத்தன்று விடுமுறை வழங்காத69 நிறுவனங்கள் மீது நடவடிக்கை

கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களில் சுதந்திர தினத்தன்று விடுமுறை வழங்காத 69 நிறுவனங்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இது குறித்து கிருஷ்ணகிரி தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) வெங்கடாசலபதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சம்பளத்துடன் விடுமுறை
தமிழ்நாடு தேசிய பண்டிகை விடுமுறை சட்டம், உணவு நிறுவன சட்டம் மற்றும் மோட்டார் போக்குவரத்து தொழிலாளர் சட்டம் மற்றும் விதிகளின் படி, தேசிய விடுமுறை தினமான சுதந்திர தினத்தன்று கடைகள், உணவு நிறுவனங்கள் மற்றும் மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள் உள்ளிட்ட நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய ஒரு நாள் விடுமுறை வழங்கப்பட வேண்டும்.
அவ்வாறு விடுமுறை அளிக்கப்படாத பட்சத்தில் அன்றைய தினம் பணிக்கு அமர்த்தப்படும் தொழிலாளர்களுக்கு இரட்டிப்பு சம்பளம் அல்லது மாற்று விடுப்பு அனுமதித்து சம்பந்தப்பட்ட தொழிலாளர்களுக்கு அறிவிப்பு அளித்து, அதன் நகலினை தொழிலாளர் உதவி, உதவி ஆய்வாளர்களுக்கு அனுப்பி விடுமுறை தினத்தன்று நிறுவனத்தில் அதனை கட்டி வைக்க வேண்டும்.
69 நிறுவனங்கள் மீது நடவடிக்கை
அதன்படி சுதந்திர தினமான 15-ந் தேதியன்று கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் தொழிலாளர் உதவி ஆணையர் தலைமையில் கடைகள், உணவு நிறுவனங்கள் மற்றும் மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களில் சிற்பபு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த சிறப்பு ஆய்வின் போது 46 கடைகள் மற்றும் 52 உணவு நிறுவனங்கள் என மொத்தம் 98 நிறுவனங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அதன்படி சட்ட விதிமுறைகளை பின்பற்றாத 32 கடைகள், நிறுவனங்கள் மற்றும் 37 உணவு நிறுவனங்கள் என மொத்தம் 69 நிறுவனங்களின் மீது சட்ட ரீதியான நடவடிக்கை தொடரப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






