ஆசிரியர்-ஆசிரியை உள்பட 3 பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்


ஆசிரியர்-ஆசிரியை உள்பட 3 பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்
x
தினத்தந்தி 26 Sep 2022 6:45 PM GMT (Updated: 26 Sep 2022 6:46 PM GMT)

தர்மபுரி அருகே ஏலச்சீட்டு நடத்தி ரூ.4 கோடி மோசடி செய்த ஆசிரியர்-ஆசிரியை உள்பட 3 பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு கொடுத்தனர்.

தர்மபுரி

தர்மபுரி அருகே ஏலச்சீட்டு நடத்தி ரூ.4 கோடி மோசடி செய்த ஆசிரியர்-ஆசிரியை உள்பட 3 பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு கொடுத்தனர்.

ஏலச்சீட்டு மோசடி

தர்மபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு கலெக்டர் சாந்தி தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்று கொண்டார். தர்மபுரி அருகே வன்னியர் குளம், சீரியம்பட்டி மற்றும் அதனை சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கலெக்டரிடம் கொடுத்த கோரிக்கை மனுவில் கூறியுள்ளதாவது:-

பாப்பாரப்பட்டி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் மற்றும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பணிபுரியும் தலைமை ஆசிரியை, ஆசிரியரின் சகோதரர் ஆகிய 3 பேரும் எங்கள் பகுதியில் உள்ள கிராம மக்களிடம் ஏலச்சீட்டு நடத்தி ரூ.4 கோடி வரை மோசடி செய்துள்ளனர். இது தொடர்பாக போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் மனு அளித்தோம். அப்போது அனைவருக்கும் சீட்டு பணத்தை கொடுத்து விடுகிறேன் என்றும், அதற்கு தேதி போட்டு காசோலை வழங்குவதாக கூறினார். ஆனால் போலீசில் எழுதி கொடுத்தபடி அவர்கள் பணம் காசோலை தரவில்லை. தற்போது அனைவரும் செல்போனை ஆப் செய்து விட்டு தப்பிவிட்டனர். எனவே பாதிக்கப்பட்ட எங்களுக்கு ஏலச்சீட்டு பணத்தை பெற்றுத்தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். மோசடி செய்த ஆசிரியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

டாஸ்மாக் கடைகள்

இதேபோன்று தர்மபுரி நகராட்சி 18-வது வார்டு பொதுமக்கள் கலெக்டரிடம் கொடுத்த கோரிக்கை மனுவில், தர்மபுரி பஸ் நிலையம் அருகில் அப்துல் முஜீப் தெருவில் 2 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகிறது. இந்த கடைகளால் அந்த பகுதியில் வணிகர்கள் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவிகள் அந்த வழியாக செல்ல முடியாத நிலை உள்ளது. எனவே இந்த 2 டாஸ்மாக் கடைகளையும் வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த கோரிக்கை மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் தெரிவித்தார்.


Next Story