கூடுதல் கட்டணம் வசூலிக்கும் திரையரங்குகள் மீது நடவடிக்கை - சென்னை ஐகோர்ட்டு உத்தரவு


கூடுதல் கட்டணம் வசூலிக்கும் திரையரங்குகள் மீது நடவடிக்கை - சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
x

கூடுதல் கட்டணம் வசூலிக்கும் திரையரங்குகளின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

தமிழ்நாட்டில் பண்டிகை காலங்களில் புதிய திரைப்படங்ள் வெளியாகும் போது, கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. எனவே, கூடுதல் கட்டணம் வசூலிக்கும் திரையரங்கங்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை ஐகோர்ட்டில், தேவராஜன் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.

அந்த வழக்கில், ''கூடுதல் கட்டணம் வசூலிக்கும் திரையரங்கங்களை சிறப்பு குழு அமைத்து கண்காணிக்க வேண்டும். அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதலாக வசூலித்த கட்டணத்தை திருப்பித்தர உத்தரவிட வேண்டும்'' என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கிற்கு தமிழ்நாடு அரசின் வருவாய் நிர்வாக ஆணையர் தாக்கல் செய்த பதில் மனுவில், ''தமிழ்நாடு முழுவதும் திரையரங்குகளில் சோதனை நடத்தி கூடுதல் கட்டணம் வசூலித்த திரையரங்குகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது'' என்று கூறி அதற்குரிய பட்டியலை தாக்கல் செய்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அனிதா சுமந்த், ''திரையரங்குகளை தொடர்ந்து கண்காணித்து, கூடுதல் கட்டணம் வசூலிக்கும் திரையரங்குகளின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தார்.


Next Story