கோவையில் 4 தொழிற்பேட்டைகள் கொண்டுவர நடவடிக்கை

கோவையில் 4 தொழிற்பேட்டைகள் கொண்டுவர நடவடிக்கை
கோவை
கோவையில் 4 தொழிற்பேட்டைகள் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் அமைச்சர்கள் தா.மோ. அன்பரசன், டி.ஆர்.பி.ராஜா கூட்டாக தெரிவித்தனர்.
கோவை கொடிசியா வளாகத்தில் ஸ்டார்ட்-அப் திருவிழாவில் பங்கேற்ற அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன் மற்றும் டிஆர்பி.ராஜா ஆகியோர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின்போது கூறியதாவது:-
கோவையில் 4 தொழிற்பேட்டைகள்
ஸ்டார்ட்-அப் திருவிழா மிகச் சிறப்பான முறையில் உள்ளது. இதில் 450 நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன.
இதுபோன்று தமிழகத்திற்கு இது மிகப்பெரிய பெருமை. மாதத்திற்கு ஒருமுறை மதுரை, திருச்சி, நெல்லை, கன்னியாகுமரியில் தொடர்ந்து நடைபெறும். ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுக்கு ரூ.10 லட்சம் மானியம் வழங்கி வருகிறோம். வரும் காலங்களில் மானியம் அதிகரிக்கப்படும். இந்தியாவில் சிறந்த மாநிலம் தமிழகம். கல்லூரிகளிலே மாணவர்களுக்கு தொழில் புரியக்கூடிய வாய்ப்பு வழங்கப்படும். மேலும் மாணவர்களுக்கு தொழில் பயிற்சி கொடுத்து வருகிறோம். ஒரு மாத காலத்தில் மிகப்பெரிய நிறுவனங்கள் தமிழகத்தை நோக்கி வர உள்ளது. கோவையை சுற்றிலும் பல்வேறு நிறுவனங்கள் வர உள்ளது. சிறு,குறு தொழில் நிறுவனங்களில் உள்ள பிரச்சினைகள் களையப்படும். மாவட்ட தொழில் மையத்தில் வங்கி கடன் முறையாக வழங்கப்பட்டு வருகிறது. கோவையில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட 4 தொழிற்பேட்டைகளை கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும்.
கோவைக்கு தனிக்கவனம்
தொழில் நகரமாக கோவை மிக முக்கிய பங்கு வகிக்கிறது. கோவைக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனிக்கவனம் செலுத்தி வருகிறார். அடுத்த கட்ட வளர்ச்சி கோவைக்கு உள்ளது. தொழில்நுட்பத்தில் நாங்கள் கவனம் செலுத்தி வருகிறோம். பல்வேறு நிறுவனங்கள் கோவையை நோக்கி வருகிறது. அடுத்த கட்ட வளர்ச்சி திட்டங்களை திராவிட மாடல் அரசு வெகு விரைவில் நிறைவேற்றும். புதிய தொழில்முனைவோர்களை ஊக்கப்படுத்திடவும், உதவிடவும் உதவி மையம் அமைக்கப்பட்டு உள்ளது. தொழில் நகரங்களுக்கு எல்லாம் சென்னையில் இருந்து நேரடி விமான சேவை ஏற்படுத்தப்படும்.
சிறு, குறு தொழிற்கூடங்களுக்கு மின்கட்டணத்தை 25 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக குறைத்து உள்ளோம். மாற்றங்களுக்கு ஏற்ப டெக்ஸ்டைல் இண்டஸ்ட்ரீஸ் தொழில்நுட்ப ரீதியாக நீங்கள் மாற வேண்டும் என அறிவுறை வழங்கியுள்ளோம். அதிகமான ஏற்றுமதியை திருப்பூர் செய்து வருகிறது. உலக அளவில் தொழில்நுட்ப ரீதியாக அது எப்படி செயல்படுகிறது என அறிந்து செயல்பட வேண்டும். பருத்தி விவசாயிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.