நங்காஞ்சியாறு அணையை சுற்றுலா தலமாக அறிவிக்க நடவடிக்கை


நங்காஞ்சியாறு அணையை  சுற்றுலா தலமாக அறிவிக்க நடவடிக்கை
x
தினத்தந்தி 30 Sep 2023 1:00 AM GMT (Updated: 30 Sep 2023 1:00 AM GMT)

நங்காஞ்சியாறு அணையை சுற்றுலா தலமாக அறிவிக்க நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் அர.சக்கரபாணி கூறினார்.

திண்டுக்கல்

ஒட்டன்சத்திரம் அருகே உள்ள இடையக்கோட்டையில் நேருஜி அரசு மேல்நிலைப்பள்ளி முன்பு ரூ.10 லட்சம் மதிப்பில் பயணியர் நிழற்குடை அமைக்கும் பணிக்கான பூமி பூஜை நேற்று நடந்தது. இந்த விழாவில் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பணியை தொடங்கி வைத்து பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:- ஒட்டன்சத்திரம் பரப்பலாறு அணை ஏற்கனவே சுற்றுலா தலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதேேபால் இடையக்கோட்டை நங்காஞ்சியாறு அணையை சுற்றுலா தலமாக அறிவித்து படகு சவாரி உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளை நிறைவேற்றி தர நடவடிக்கை எடுக்கப்படும். இடையக்கோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் பழமையான கட்டிடத்தில் இயங்கி வருகிறது. இதனால் 2 ஏக்கர் நிலம் வாங்கப்பட்டு புதிய கட்டிடம் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். இடையக்கோட்டையில் 6 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டதால் அந்த பகுதியில் அதிகளவு மழை பெய்துள்ளது. இதைத்தொடர்ந்து ஒட்டன்சத்திரம் தொகுதி முழுவதும் மேலும் 35 லட்சம் மரக்கன்றுகள் நடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக, சிந்தனைப்பட்டி, ஓடைப்பட்டி, மார்க்கம்பட்டி, சின்னக்காம்பட்டி, வலையபட்டி, ஜவ்வாதுபட்டி உள்ளிட்ட பல்வேறு ஊராட்சிகளில் ரூ.10 கோடி மதிப்பில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை அமைச்சர் அர.சக்கரபாணி தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் ஒட்டன்சத்திரம் தாசில்தார் முத்துசாமி, தி.மு.க. ஒன்றிய செயலாளர் ஜோதீஸ்வரன், ஒன்றிய பொருளாளர் செல்லமுத்து, ஒன்றிய கவுன்சிலர்கள் செல்வி செல்லமுத்து, ஜென்சி செல்வராஜ், ஊராட்சி மன்ற தலைவர் சரவணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story