அரசு போக்குவரத்து துறையில் காலி பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை -அரசாணை வெளியீடு


அரசு போக்குவரத்து துறையில் காலி பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை -அரசாணை வெளியீடு
x

அரசு போக்குவரத்து துறையில் காலி பணியிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சென்னை,

அரசு போக்குவரத்து கழகங்களில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்று கடந்த 2021-ம் ஆண்டு செப்டம்பரில் நடந்த சட்டசபை கூட்டத்தொடரின்போது போக்குவரத்து துறை அமைச்சர் அறிவித்தார்.

அதைத்தொடர்ந்து தற்போது கும்பகோணம் போக்குவரத்துக்கழகத்தில் உள்ள டிரைவர் பணியிடங்களையும், அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் உள்ள டிரைவர் மற்றும் கண்டக்டர் பணியிடங்களையும் நிரப்புவதற்கு அரசு முடிவு செய்துள்ளது.

கல்வித்தகுதி

அதன்படி கும்பகோணம் போக்குவரத்து கழகத்தில் மொத்தமுள்ள 203 காலி பணியிடங்களில் 122 டிரைவர் பணியிடங்களையும், அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் மொத்தமுள்ள 800 காலி பணியிடங்களில் 685 காலி பணியிடங்களை டிரைவர் மற்றும் கண்டக்டர்களை கொண்டு நிரப்பவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

டிரைவர் பணிக்கு கல்வித்தகுதியாக 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். டிரைவர் மற்றும் கண்டக்டர் பணிக்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கனரக போக்குவரத்து வாகனத்தை இயக்குவதற்கான ஓட்டுனர் உரிமம் (லைசென்ஸ்), முதலுதவி சான்றிதழ் ஆகியவை பெற்றிருக்க வேண்டும்.

இதர வகுப்பினர் 24 வயது முதல் 40 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர், எஸ்.சி. எஸ்.டி. பிரிவினர் 45 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். 18 மாதங்கள் கனரக வாகனங்களை ஓட்டிய அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம் எவ்வளவு?

உயரம் 160 செ.மீ.க்கு குறையாமலும், எடை குறைந்தபட்சம் 50 கிலோவாகவும், கண் பார்வை தெளிவு உள்ளவர்களாகவும் இருக்க வேண்டும். டிரைவர்களுக்கான சம்பளம் ரூ.17 ஆயிரத்து 700-ல் இருந்து ரூ.56 ஆயிரத்து 200 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. டிரைவர் மற்றும் கண்டக்டர் 2 பணிகளை சேர்த்து செய்பவர்களுக்கும் இதே அளவில் சம்பளம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்த காலி பணியிடங்களை நிரப்புவதற்காக சம்பந்தப்பட்ட போக்குவரத்து கழகத்தின் மேலாண்மை இயக்குனர்கள் தலைமையில் தேர்வுக்குழு நியமிக்கப்பட்டு தேர்வுகள் நடைபெறும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story