குழந்தைகள், பெண்கள் தங்கும் விடுதிகளை முறைப்படி பதிவு செய்யாவிட்டால் நடவடிக்கை


குழந்தைகள், பெண்கள் தங்கும் விடுதிகளை முறைப்படி பதிவு செய்யாவிட்டால் நடவடிக்கை
x
தினத்தந்தி 24 May 2023 6:45 PM GMT (Updated: 24 May 2023 6:45 PM GMT)

விழுப்புரம் மாவட்டத்தில் குழந்தைகள், பெண்கள், முதியோர் தங்கும் விடுதிகளை முறைப்படி பதிவு செய்யாவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட கலெக்டர் சி.பழனி எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

விழுப்புரம்

விழுப்புரம் மாவட்டத்தில் தனியார் பள்ளிகள்- கல்லூரிகள் தங்கும் விடுதிகளை நடத்தி வருகின்றன. இதுதவிர குழந்தைகள், முதியோர் இல்லங்கள் மற்றும் பணிபுரியும் மகளிர் விடுதிகள் ஆகியவை செயல்பட்டு வருகின்றன. இவற்றில் சில பதிவு செய்யாமலும், பதிவுகளை புதுப்பிக்காமலும் இயங்கி வருவதாக புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. இவ்விடுதிகளை முறைப்படுத்தி கண்காணிக்க தமிழக அரசால் தமிழ்நாடு பெண்கள், குழந்தைகள் விடுதிகள் மற்றும் இல்லங்கள் சட்டம் கொண்டு வரப்பட்டு நடைமுறையில் உள்ளது. இச்சட்டத்தின்படி விடுதி நிர்வாகிகள், www.tnswp.com என்ற இணையதள வழியில் உரிய சான்றுகளுடன் தாங்கள் நடத்தி வரும் விடுதிகளை பதிவு செய்தல் மற்றும் புதுப்பித்தல் போன்றவற்றை வருகிற 28.5.2023-க்குள் மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.

சட்டப்படி நடவடிக்கை

மேலும் இதனை கண்காணித்திட மாவட்ட அளவில் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு விடுதிகளின் செயல்பாடுகள் குறித்து தொடர் ஆய்வு மேற்கொள்ளப்படும். அவ்வாறு மேற்கொள்ளப்படும் ஆய்வின்போது குறைபாடுகள் கண்டறியும்பட்சத்தில் சட்டப்படி விடுதிகள், இல்லங்களை உடனடியாக மூடுவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மேலும் சம்பந்தப்பட்ட நிர்வாகிகள் மீது காவல்துறையின் மூலம் வழக்கு தொடர்ந்து அதிகபட்சம் 3 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படும். எனவே விழுப்புரம் மாவட்டத்தில் தனியார் விடுதிகள், இல்லங்கள் நடத்திவரும் அனைத்து விடுதி நிர்வாகிகளும் மேற்கண்ட இணையதளத்தில் தவறாமல் பதிவு செய்தல், புதுப்பித்தல் பணியை 28-ந் தேதிக்குள் முடித்திடுமாறும், விடுதியில் போதிய பாதுகாப்பு வழங்குதல், தேவையான உட்கட்டமைப்பு வசதிகள் உள்ளதை உறுதிபடுத்திக்கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் விவரங்களுக்கு மாவட்ட கலெக்டர் அலுவலக தரைத்தளத்தில் இயங்கி வரும் மாவட்ட சமூகநல அலுவலகத்தை (தொலைபேசி எண்: 04146-222288) அணுகலாம். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


Next Story