பால் கொள்முதலை அதிகரித்து ஆவின் நிறுவனத்தை மேம்படுத்த நடவடிக்கை -அண்ணாமலை வலியுறுத்தல்


பால் கொள்முதலை அதிகரித்து ஆவின் நிறுவனத்தை மேம்படுத்த நடவடிக்கை -அண்ணாமலை வலியுறுத்தல்
x

பால் கொள்முதல் விலையை அதிகரித்து ஆவின் நிறுவனத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார்.

சென்னை,

தி.மு.க. ஆட்சியின் தொடர் தோல்விகளை மறைக்க நாளொரு நாடகம் ஆடுவதை வழக்கமாகக்கொண்டிருக்கிறார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின். ஆட்சிக்கு வந்ததில் இருந்து 2 ஆண்டு காலமாக தி.மு.க.வினர் நடத்தும் தனியார் நிறுவனங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து அரசு நிறுவனங்களை புறக்கணித்து வரும் தி.மு.க. தற்போது ஆரம்பித்திருக்கும் புதிய நாடகம் தமிழகத்தில் அமுல் நிறுவனம் வருவதைத் தடுக்கவேண்டும் என்று மத்திய மந்திரி அமித்ஷாவுக்கு எழுதப்பட்ட கடிதமும், ஆவின் நிறுவனம் மீதான போலி அக்கறை ஆகும்.

அரசு ஊழியர்களுக்கு தீபாவளி இனிப்புகள் வழங்க முதலில் தனியார் நிறுவனத்திடம் இருந்து இனிப்புப் பெட்டிகள் கொள்முதல் செய்ய ஒப்பந்தமிட்டிருந்த தி.மு.க.வின் இரட்டை வேடத்தை தமிழக பா.ஜ.க. முற்றிலும் அம்பலப்படுத்தியதால் வேறு வழியின்றி அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்து ஆவின் நிறுவனத்திடம் இருந்தே இனிப்புகள் வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மறந்து விட்டாரா?

திசை திருப்புதல் நாடகம்

பாலூட்டும் தாய்மார்களுக்கான சத்துணவு தொகுப்பு ஏலத்தில் சத்துப் பால் பொடி தயாரிக்க ஆவின் முன் வந்த போதிலும் அதை பரிசீலிக்காமல் தனியார் நிறுவனத்துக்கு தாரை வார்த்ததை தி.மு.க. அரசு மறுக்க முடியுமா? தமிழ்நாட்டில் தினமும் 244 லட்சம் லிட்டர் பால் உற்பத்தி செய்யப்படும் நிலையில் ஆவின் நிறுவனம் கொள்முதல் செய்வது தினமும் 35 லட்சம் லிட்டர் மட்டுமே. அதாவது மாநிலத்தின் மொத்த பால் உற்பத்தியில் வெறும் 14 சதவீதம் மட்டுமே அரசு நிறுவனமான ஆவின் கொள்முதல் செய்கிறது.

மேலும் 2021-ம் ஆண்டு மே மாதத்துக்குப் பின்னர் சராசரி பால் கொள்முதல் 32 லட்சம் லிட்டராக குறைந்துள்ளதாக புகார்கள் உள்ளன. அரசு நிறுவனமான ஆவின் நிறுவனத்தை மேம்படுத்தும் முயற்சிகளில் சிறிதளவும் ஈடுபடாமல் தி.மு.க. வினர் நடத்தும் தனியார் நிறுவனங்கள் லாபம் சம்பாதிப்பதையே நோக்கமாகக்கொண்டு செயல்படும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்களின் கவனத்தை திசை திருப்ப அரசு நிறுவனங்களை பயன்படுத்திக்கொள்கிறார்.

தினசரி பால் கொள்முதலை அதிகரித்து பால் உற்பத்தியாளர்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதிலும், ஆவின் நிறுவனத்தை மேலும் திறம்பட செயல்படுத்துவதிலும் கவனத்தை செலுத்தாமல் வழக்கமான திசை திருப்புதல் நாடகங்களில் ஈடுபடுவதைத் தவிர்க்கவேண்டும் என்று முதல்-அமைச்சரை தமிழக பா.ஜ.க. சார்பில் வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story