நடிகர் செந்தில், பீமரத சாந்தி வழிபாடு


நடிகர் செந்தில், பீமரத சாந்தி வழிபாடு
x
தினத்தந்தி 29 March 2023 6:45 PM GMT (Updated: 29 March 2023 6:45 PM GMT)

திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் நடிகர் செந்தில், தனக்கு 70 வயது பூர்த்தி அடைவதை முன்னிட்டு பீமரத சாந்தி வழிபாடு நடத்தினார்.

மயிலாடுதுறை

திருக்கடையூர்:

திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் நடிகர் செந்தில், தனக்கு 70 வயது பூர்த்தி அடைவதை முன்னிட்டு பீமரத சாந்தி வழிபாடு நடத்தினார்.

திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவில்

மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான அமிர்தகடேஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு மூலவராக அமிர்தகடேஸ்வரரும், உற்சவராக காலசம்ஹார மூர்த்தியும் அருள் பாலித்து வருகிறார்கள்.

சிவபெருமான், எமனை காலால் எட்டி உதைத்த தலமான இங்கு பக்தர்கள் தங்கள் ஆயுள் விருத்திக்காக வழிபாடு செய்வது வழக்கம். இங்கு பக்தர்கள் சஷ்டியப்த பூர்த்தி(அறுபதாம் கல்யாணம்) செய்வது சிறப்பம்சம் ஆகும்.

மேலும் ஆயுள் விருத்திக்காக உக்ர ரத சாந்தி, பீம ரத சாந்தி, சதாபிஷேகம் உள்ளிட்ட பல்வேறு பூஜைகளும் செய்யப்படுகின்றன. இதற்காக வெளிமாநிலங்கள், வெளிநாடுகள் மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் அமிர்தகடேஸ்வரர் கோவிலுக்கு வருகின்றனர்.

நடிகர் செந்தில் பீமரத சாந்தி ஹோமம்

சிறப்பு பெற்ற திருக்கடையூர் கோவிலுக்கு நடிகர் செந்தில் நேற்று குடும்பத்துடன் வந்தார். பின்னர் அவர் கோ பூஜை, கஜ பூஜை செய்து வழிபட்டார். தனக்கு 70 வது வயது பூர்த்தி அடைவதை முன்னிட்டு அவர் தனது மனைவி கலைச்செல்வியுடன் ஆயுள் விருத்திக்காக பீமரத சாந்தி ஹோமம் செய்து வழிபாடு நடத்தினார்.

இதற்கான பூஜைகளை கோவில் அர்ச்சகர் அமிர்தகடேஸ்வரர் குருக்கள் உள்ளிட்டோர் செய்தனர். தொடர்ந்து விநாயகர், அமிர்தகடேஸ்வரர், காலசம்ஹார மூர்த்தி, அபிராமி அம்மன் உள்ளிட்ட சன்னதிகளில் நடிகர் செந்தில் சாமி தரிசனம் செய்தார்.

முன்னதாக கோவில் நிர்வாகம் சார்பில் அவருக்கு வரவேற்பு அளித்தனர். நடிகர் செந்தில் மகன்கள் மணிகண்ட பிரபு, ஹேமச்சந்திர பிரபு உள்ளிட்ட குடும்பத்தினர் உடன் இருந்தனர்.


Next Story