'லியோ' திரைப்படம் வெளியீடு நடிகர் விஜய் ரசிகர்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்


லியோ திரைப்படம் வெளியீடு நடிகர் விஜய் ரசிகர்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
x

கடலூாில் ‘லியோ’ திரைப்படம் வெளியிடப்பட்டது. இதையொட்டி நடிகர் விஜய் ரசிகர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினா்.

கடலூர்

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய், நடித்த 'லியோ' திரைப்படம் நேற்று திரைக்கு வந்தது. இந்த திரைப்படத்திற்காக பல்வேறு திரையரங்குகளில் ரசிகர்களுக்கு டிக்கெட்டுகள் வழங்குவதில் கடும் குழப்பம் ஏற்பட்டது. இதையடுத்து நேற்று முன்தினமே, முதல் நாளுக்கான அனைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்து விட்டன. கடலூர் மாநகரில் 4 திரையரங்குகள் உள்ளன. இந்த அனைத்து தியேட்டர்களிலும் லியோ திரைப்படமே வெளியானது.

முன்னதாக காலை 9 மணிக்கு சிறப்பு காட்சி வெளியிடப்பட்டது. இதற்காக கடலூரில் உள்ள 4 திரையரங்கு முன்பும் காலை 9 மணிக்கே விஜய் ரசிகர்கள் திரண்டனர். கூட்டத்தை கட்டுப்படுத்த அனைத்து திரையரங்கிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. பின்னர் படம் திரையிடப்படுவதற்கு சிறிது நேரத்திற்கு முன்பு விஜய் ரசிகர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர். இதனை தொடர்ந்து திரையரங்குகளின் முன்பக்க கதவு திறக்கப்பட்டதும் ரசிகர்கள் முண்டியடித்துக் கொண்டு உள்ளே புகுந்தனர். பின்னர் லியோ திரைப்படம் வெளியிடப்பட்டதும் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். முதல் நாளான நேற்று அனைத்து தியேட்டர்களிலும் கூட்டம் அலைமோதியதை காண முடிந்தது. தொடர்ந்து விஜய் ரசிகர்கள் படம் பார்த்ததும், எவ்வித ஆரவாரத்திலும் ஈடுபடாமல் அமைதியாக கலைந்து சென்றனர்.

இதற்கிடையே தொடர் விடுமுறையையொட்டி டிக்கெட் முன்பதிவுக்காக நேற்று ஒரே நேரத்தில் ஏராளமான ரசிகர்கள் தியேட்டர் வளாகத்தில் திரண்டதால், டிக்கெட்டுகள் கொடுப்பதில் சிரமம் ஏற்பட்டது. மேலும் ஆன்லைனில் இல்லாமல் நேரடியாக வரும் நபர்களுக்கு மட்டுமே டிக்கெட் வழங்கப்பட்டதால் ரசிகர்கள் முண்டியடித்து கொண்டு டிக்கெட்டுகளை வாங்க ஆர்வம் காட்டினர்.


Next Story