சிறை தண்டனையை எதிர்த்து நடிகை ஜெயப்பிரதா தொடர்ந்த வழக்கின் தீர்ப்பு தள்ளிவைப்பு


சிறை தண்டனையை எதிர்த்து நடிகை ஜெயப்பிரதா தொடர்ந்த வழக்கின் தீர்ப்பு தள்ளிவைப்பு
x

சிறை தண்டனையை எதிர்த்து நடிகை ஜெயப்பிரதா தொடர்ந்த வழக்கின் தீர்ப்பு தள்ளிவைப்பு ஐகோர்ட்டு உத்தரவு.

சென்னை,

சென்னையில் நடிகை ஜெயப்பிரதாவுக்கு சொந்தமான தியேட்டர் உள்ளது. இந்த தியேட்டரில் பணிபுரியும் ஊழியர்களின் ஊதியத்தில் பிடித்தம் செய்த இ.எஸ்.ஐ. தொகையை தொழிலாளர் அரசு காப்பீட்டு கழகத்தில் செலுத்தவில்லை என்று எழும்பூர் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த எழும்பூர் கோர்ட்டு, ஜெயப்பிரதா உள்ளிட்ட 3 பேருக்கு தலா 6 மாத சிறை தண்டனையும், தலா ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு அளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் ஜெயப்பிரதா உள்ளிட்டோர் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தொழிலாளர் அரசு காப்பீட்டு கழகம் சார்பில் வக்கீல் டி.என்.சி.கவுசிக் ஆஜராகி, '1988-ம் ஆண்டு முதல் 2006-ம் ஆண்டு வரை ஊழியர்களுக்கு 1 லட்சத்து 63 ஆயிரத்து 22 ரூபாய் இ.எஸ்.ஐ. தொகையாக மனுதாரர்கள் செலுத்த வேண்டும். இதை செலுத்ததால், அதற்கு கடந்த செப்டம்பர் 27-ந் தேதி வரை வட்டியாக 35 லட்சத்து 77 ஆயிரத்து 602 ரூபாயும், இழப்பீடாக 28 ஆயிரத்து 353 ரூபாயும் என்று மொத்தம் 37 லட்சத்து 68 ஆயிரத்து 977 ரூபாய் செலுத்த வேண்டும்' என்று வாதிட்டார். ஆனால், மனுதாரர்கள் தரப்பில் ரூ.20 லட்சம் செலுத்துவதாக தெரிவிக்கப்பட்டது. அதையடுத்து, இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.


Next Story