குளிர்பானத்தில் மயக்கமருந்து கலந்து கொடுத்துபெண்ணிடம் 3½ பவுன் சங்கிலி திருட்டு


குளிர்பானத்தில் மயக்கமருந்து கலந்து கொடுத்துபெண்ணிடம் 3½ பவுன் சங்கிலி திருட்டு
x
தினத்தந்தி 24 April 2023 6:45 PM GMT (Updated: 24 April 2023 6:45 PM GMT)

மெஞ்ஞானபுரம் அருகே குளிர்பானத்தில் மயக்கமருந்து கலந்து கொடுத்து பெண்ணிடம் 3½ பவுன் சங்கிலி திருடிய உறவின பெண் கைது செய்யப்பட்டார்.

தூத்துக்குடி

மெஞ்ஞானபுரம்:

மெஞ்ஞானபுரம் அருகே குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து பெண்ணிடம் 3½பவுன் சங்கிலியைதிருடிய உறவின பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

மயக்க மருந்து கலந்து...

மெஞ்ஞானபுரம் அருகே உள்ள அனையூர் நங்கைமொழி பகுதியைச் சேர்ந்த ராமையா மனைவி குப்பம்மாள் (வயது 73). இவரது மகள் சுப்புலட்சுமி (48). சம்பவத்தன்று இவர்கள் இருவரும் வீட்டில் இருந்தபோது, பக்கத்து வீட்டைச் சேர்ந்த அவரது உறவினரான திரவிய ரமேஷ் மனைவி சொர்ணலெட்சுமி (30) என்பவர் வந்துள்ளார்.

அப்போது சொர்ணலெட்சுமி மயக்க மருந்து கலக்கப்பட்ட குளிர் பானத்தை குப்பம்மாள் மற்றும் சுப்புலட்சுமிக்கு குடிக்க கொடுத்துள்ளார்.

சங்கிலி திருட்டு

மயக்க மருந்து கலந்ததை அறியாத இருவரும் குளிர்பானத்தை குடித்த சிறிது நேரத்தில் மயங்கி உள்ளனர்.

இதை பயன்படுத்தி சுப்புலட்சுமி கழுத்தில் அணிந்திருந்த 3½ பவுன் தங்க சங்கிலியை சொர்ணலெட்சுமி திருடிச் சென்றுவிட்டாராம். சிறிது நேரத்தில் மயக்கம் தெளிந்த தாயும், மகளும் நகை திருடப்பட்டதை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து சொர்ணலட்சுமியிடம் கேட்டபோது, நகை திருட்டுக்கும், தனக்கும் சம்பந்தம் இல்லை என கூறிவிட்டாராம்.

உறவின பெண் சிக்கினார்

இதுகுறித்து குப்பம்மாள் மெஞ்ஞானபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இதுகுறித்து மெஞ்ஞானபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பவுலோஸ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார். இதில் சொர்ணலெட்சுமி மயக்க மருந்து கொடுத்து நகையை திருடி சென்றது தெரிய வந்தது. இதை தொடர்ந்து போலீஸ் இன்ஸ்பெக்டர், அவரை கைது செய்து அவரிடமிருந்த 3½ பவுன் தங்க சங்கிலியை மீட்டார்.

மேலும் இதுகுறித்து போலீசார் அவரிடம் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story