சென்னை-மலேசியா இடையே கூடுதலாக தினசரி விமான சேவை தொடக்கம்


சென்னை-மலேசியா இடையே கூடுதலாக தினசரி விமான சேவை தொடக்கம்
x

சென்னை-மலேசியா இடையே கூடுதலாக ஒரு விமான சேவை தொடங்கப்பட்டு உள்ளது.

சென்னை

மீனம்பாக்கம்,

சென்னை மீனம்பாக்கம் அண்ணா பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து மலேசிய தலைநகர் கோலாலம்பூருக்கு தினமும் 2 மலேசியன் ஏர்லைன்ஸ் விமானங்கள், 2 ஏர் ஏசியா விமானங்கள், 1 இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் என 5 விமானங்கள் தினமும் இயக்கப்பட்டு வந்தன. அதேபோல் கோலாலம்பூரில் இருந்து சென்னைக்கு 5 விமானங்கள் வந்தன. சென்னை-மலேசியா இடையே தினமும் 10 விமான சேவைகள் இயக்கப்பட்டன.

மலேசியா சுற்றுலா தளமாக இருப்பதாலும், மலேசியா நாட்டில் உள்ள கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து பல்வேறு நாடுகளுக்கு இணைப்பு விமானங்கள் செல்வதாலும் சென்னையில் இருந்து மலேசியாவுக்கு பயணிகள் அதிக அளவில் பயணம் செய்கின்றனர். தினமும் 5 விமானங்கள் இயக்கப்படுவதால் மலேசியா செல்லும் பயணிகளுக்கு விமானங்களில் டிக்கெட் கிடைப்பதில் சிரமம் ஏற்படுகிறது.

இந்த நிலையில் சென்னை-கோலாலம்பூர் இடையே தினசரி கூடுதல் விமான சேவையை இயக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி பாட்டிக் ஏர்லைன்ஸ் விமானம் கூடுதலாக இயக்கப்படுகிறது. மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து தினமும் மாலையில் புறப்படும் இந்த விமானம், இரவு 10.25 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்தடையும்.

பின்னர் சென்னையில் இருந்து இரவு 11.15 மணிக்கு மீண்டும் மலேசியாவுக்கு புறப்பட்டு செல்கிறது. இந்த விமானம் போயிங் ரக விமானம் என்பதால், 189 பயணிகள் வரை ஒரே நேரத்தில் பயணிக்க முடியும்.

சென்னை-கோலாலம்பூர் இடையே ஏற்கனவே 5 விமானங்கள் செல்லும் நிலையில் கூடுதலாக ஒரு விமானம் தொடங்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் சென்னை-மலேசியா இடையே 10 ஆக இருந்த விமான சேவை 12 ஆக அதிகரித்து உள்ளது. இது விமான பயணிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


Next Story