கூடுதல் தண்ணீர் திறப்பு எதிரொலி:லோயர்கேம்ப் நிலையத்தில் மின்உற்பத்தி அதிகரிப்பு


கூடுதல் தண்ணீர் திறப்பு எதிரொலி:லோயர்கேம்ப் நிலையத்தில் மின்உற்பத்தி அதிகரிப்பு
x
தினத்தந்தி 7 Jan 2023 6:45 PM GMT (Updated: 7 Jan 2023 6:46 PM GMT)

முல்லைப்பெரியாறு அணையில் இ்ருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டதால் லோயர்கேம்ப் நிலையத்தில் மின் உற்பத்தி அதிகரிக்கப்பட்டுள்ளது.

தேனி

கூடலூர் அருகே லோயர்கேம்பில் மின்சார உற்பத்தி நிலையம் உள்ளது. இங்கு முல்லைப்பெரியாறு அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் மூலம் மின்சார உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. மின்உற்பத்திக்காக இங்கு 4 ஜெனரேட்டர்கள் அமைக்கப்பட்டு உள்ளன. ஒரு ஜெனரேட்டர் மூலம் 42 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும். நேற்று முன்தினம் வரை வினாடிக்கு 511 கனஅடி வீதம் தண்ணீர் திறந்துவிடப்பட்டு வந்தது. இதன் காரணமாக லோயர்கேம்ப் மின்நிலையத்தில் 2 ஜெனரேட்டர்கள் மூலம் வினாடிக்கு தலா 23 மெகாவாட் வீதம் மொத்தம் 46 மெகாவாட் மின்உற்பத்தி செய்யப்பட்டு வந்தது.

இந்நிலையில் தற்போது வைகை அணையின் நீர்மட்டம் குறைந்து வருவதால் நேற்று காலை முதல் முல்லைப்பெரியாறு அணையில் இருந்து வைகை அணைக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு வினாடிக்கு 511 கனஅடியில் இருந்து 1,867 கனஅடியாக அதிகரிக்கப்பட்டது.

இதன் காரணமாக நேற்று காலை முதல் லோயர்கேம்ப் மின்உற்பத்தி நிலையத்தில், 4 ஜெனரேட்டர் மூலம் தலா 42 மெகாவாட் வீதம் மொத்தம் 168 மெகாவாட் மின்உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. நேற்று முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 140 அடியாகவும், நீர்வரத்து வினாடிக்கு 117 கனஅடியாகவும் இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 1,867 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.


Related Tags :
Next Story