கொள்ளிடம் ஆற்றில் கூடுதல் தண்ணீர் திறப்பு: 6 கிராமங்களை வெள்ளம் சூழ்ந்தது


கொள்ளிடம் ஆற்றில் கூடுதல் தண்ணீர் திறப்பு: 6 கிராமங்களை வெள்ளம் சூழ்ந்தது
x

கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் 6 கிராமங்களை தண்ணீர் சூழ்ந்தது. அங்குள்ள பொதுமக்கள் படகுகள் மூலம் மீட்கப்பட்டனர்.

கொள்ளிடம்,

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் மேட்டூர் அணை மீண்டும் நிரம்பி உபரிநீர் காவிரியில் திறந்து விடப்படுகிறது.

அந்த தண்ணீர் திருச்சி மாவட்டம் முக்கொம்பு மேலணையை அடைந்து அங்கிருந்து கொள்ளிடம் ஆற்றில் திறக்கப்படுகிறது. தற்போதைய நிலவரப்படி 2 லட்சத்து 6 ஆயிரம் கனஅடி தண்ணீர் கொள்ளிடத்தில் வெளியேற்றப்படுகிறது.

6 கிராமங்களை வெள்ள நீர் சூழ்ந்தது

இதனால் கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கடல் போல காட்சி அளிக்கிறது. இந்த நீரானது, மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் ஆற்றின் வழியே சென்று பழையாறு அருகே கடலில் கலக்கிறது.

கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கரையோர கிராமங்களான நாதல்படுகை, முதலைமேடு திட்டு, வெள்ளைமணல், கோரை திட்டு, பாலூரான்படுகை, வாடி ஆகிய 6 கிராமங்களை வெள்ளநீர் சூழ்ந்தது. இந்த கிராமங்களில் உள்ள சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் அந்த கிராமங்களுக்கு போக்குவரத்து முழுவதுமாக துண்டிக்கப்பட்டுள்ளது.

படகுகள் மூலம் மீட்பு

அங்குள்ள பொதுமக்கள் படகுகள் மூலம் மீட்கப்பட்டு கரையோரம் உள்ள நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான உணவு, குடிநீர் உள்பட அனைத்து அடிப்படை வசதிகளும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக வருவாய்த்துறையினர், ஊரக வளர்ச்சி துறையினர் செய்து கொடுத்து வருகின்றனர்.

மேலும் அங்குள்ள கிராமங்களில் உள்ள கால்நடைகள் மீட்கப்பட்டு ஆற்றின் கரையோரம் கட்டிவைக்கப்பட்டுள்ளன. வெள்ளத்தில் மேற்படி கிராமங்களில் சம்பா நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.


Next Story