ஆடி அமாவாசை திருவிழா: சொரிமுத்து அய்யனார் கோவிலில் 5 நாட்கள் தங்க பக்தர்களுக்கு அனுமதி


ஆடி அமாவாசை திருவிழா: சொரிமுத்து அய்யனார் கோவிலில் 5 நாட்கள் தங்க பக்தர்களுக்கு அனுமதி
x

காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவிலில் ஆடி அமாவாசை திருவிழாவையொட்டி பக்தர்கள் 5 நாட்கள் தங்க அனுமதி அளிக்கப்படுகிறது.

திருநெல்வேலி

விக்கிரமசிங்கபுரம்:

காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவிலில் ஆடி அமாவாசை திருவிழா வருகிற 16-ந்தேதி (புதன்கிழமை) நடைபெற உள்ளது. இதையொட்டி நெல்லை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சொரிமுத்து அய்யனார் கோவில் திருவிழாவையொட்டி பக்தர்கள் நலன் கருதி பல்வேறு ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்துள்ளது. பக்தர்கள் வனத்துறை சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு, நான்கு மாவட்ட மக்களின் நீர் ஆதாரமாக விளங்கக்கூடிய தாமிரபரணி ஆறு மற்றும் அது உருவாகும் வனத்தில் இயற்கை சூழலை பாதுகாப்பதன் அவசியத்தையும் உணர்ந்து அனைத்து துறை அலுவலர்களுக்கும் நன்முறையில் ஒத்துழைப்பு வழங்கிட கேட்டுக் கொள்ளப்படுகிறது. கூட்ட நெரிசலால் ஏற்படும் பாதிப்பை தடுக்கும் பொருட்டு பொதுமக்கள் முந்தைய ஆண்டுகள் போலவே இந்த ஆண்டும் பாரம்பரிய முறைப்படி 5 நாட்கள் வரை வழிபாடு செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

அதன்படி, பொதுமக்கள் தங்கும் குடில் அமைக்கும் பொருட்களை எடுத்து செல்ல 13-ந்தேதி காலை 11 மணி வரை மட்டும் பாபநாசம் சோதனை சாவடியில் இருந்து வாகனங்கள் அனுமதிக்கப்படும். அன்று காலை 11 மணிக்கு மேல் முன்னேற்பாடு பணிகளை மேற்கொள்ளும் காரணத்தால் அரசு பஸ், தனியார் உள்ளிட்ட எந்த வாகனங்களும் பாபநாசம் சோதனை சாவடியில் அனுமதிக்கப்பட மாட்டாது.

14-ந்தேதி முதல் 18-ந்தேதி வரை பக்தர்கள் பாரம்பரிய சடங்குகள் மேற்கொள்ள முந்தைய ஆண்டுகள் போலவே கோவிலில் தங்க அனுமதிக்கப்படுகிறது. பக்தர்கள் அகஸ்தியர்பட்டி தற்காலிக பஸ் நிலையத்தில் இருந்து அரசு பஸ்களில் மட்டுமே கோவிலுக்கு சென்று வர அனுமதிக்கப்படுவார்கள். தனியார் வாகனங்கள் எதுவும் அனுமதிக்கப்பட மாட்டாது. 18-ந்தேதி குறைவான எண்ணிக்கையில் மட்டுமே பஸ்கள் இயக்கப்படும்.

தங்கும் குடில் பொருட்களை கீழே கொண்டு வருவதற்காக மட்டும் தனியார் வாகனங்களுக்கு 18-ந்தேதி காலை 6 மணி முதல் மாலை 3 மணி வரையிலும், 19-ந்தேதி காலை 6 மணி முதல் காலை 11 மணி வரையிலும் பாபநாசம் கோவில் பார்க்கிங் பகுதியில் பாஸ் வழங்கப்பட்டு அனுமதிக்கப்படும். கீழே இறங்கும் பக்தர்களுக்காக அரசு பஸ்கள் ஏற்பாடு செய்யப்படும்.

19-ந் தேதி காலை 11 மணிக்கு பிறகு 21-ந்தேதி வரை தூய்மை பணிகள் மற்றும் கோவில் உழவார பணி காரணமாக பொதுமக்கள் பாபநாசம் சோதனை சாவடியை கடந்து செல்வது முற்றிலும் தடை செய்யப்பட்டு உள்ளது. 22-ந்தேதி முதல் வழக்கமான நடைமுறைப்படி கோவிலுக்கு சென்று வரலாம்.

ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள், கெமிக்கல் சோப்பு, ஷாம்பு உள்ளிட்ட பொருட்கள், மண்எண்ணெய், மாசு ஏற்படுத்தும் பொருட்கள் போன்றவற்றை வனப்பகுதிக்குள் கொண்டு செல்ல தடை விதிக்கப்படுகிறது. மது, குட்கா உள்ளிட்டவற்றை வனப்பகுதிக்குள் கொண்டு செல்லும் நபர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்பட்டு அவர்களின் வாகனமும் பறிமுதல் செய்யப்படும்.

கோவில் தவிர்த்த வனப்பகுதிக்குள்ளும், ஆற்றின் ஆழமான பகுதிகளுக்கும் செல்ல அனுமதி இல்லை. பொது இடங்களில் இயற்கை உபாதை கழிக்காமல் வளாகத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள 200 கழிவறைகளை மட்டுமே பயன்படுத்திட வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story