ஆதிதிராவிடர், பழங்குடியினர் தொழில் தொடங்க மானியம்


ஆதிதிராவிடர், பழங்குடியினர் தொழில் தொடங்க மானியம்
x

ஆதிதிராவிடர், பழங்குடியினர் தொழில் தொடங்க மானியம் பெற இணையதளத்தில் தொழில்முனைவோர் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை

விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாடு அரசு பட்ஜெட் அறிக்கையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் தொழில் முனைவோரின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் அண்ணல் அம்பேத்கர் வணிக சாம்பியன்ஸ் திட்டம் என்ற புதியத்திட்டம் தொடங்கப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் தொழில் முனைவோர்கள் தொழில் தொடங்கும் போது எந்திரங்கள் மற்றும் உபகரணங்களை வாங்குவதற்கான கடனுக்கு 35 சதவீத மூலதன மானியமும், 6 சதவீத வட்டி மானியமும் வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் வியாபாரம், சேவை மற்றும் உற்பத்தி சார்ந்த தொழில்களுக்கு விண்ணப்பிக்கலாம். நேரடி விவசாயம் சார்ந்த தொழில்கள் மேற்கொள்ள இத்திட்டத்தில் வழிவகை இல்லை. இத்திட்டத்தில் புதிய தொழில் தொடங்கவும் மற்றும் ஏற்கனவே செயல்படுத்தப்படும் தொழில்களின் விரிவாக்கத்திற்கும் மானிய கடனுதவி வழங்கப்படும்.

விழிப்புணர்வு முகாம்

மேற்காணும் திட்டத்தில் பயன்பெற திட்ட அறிக்கை, விலைப்பட்டியல் மற்றும் உரிய ஆவணங்களுடன் www.msmeonline.tn.gov.in/aabcs என்ற இணையதளம் முகவரியில் விண்ணப்பிக்கலாம். மேலும் புதுக்கோட்டை கலெக்டர் அலுவலக வளாகத்தில் இயங்கி வரும் பொது மேலாளர் அலுவலகம் மாவட்ட தொழில் மையத்தினை நேரிலோ அல்லது 8925533979 என்ற செல்போன் எண்ணிலோ கூடுதல் விபரங்களுக்கு அணுகலாம்.

மேலும் இத்திட்டத்திற்கான மாபெரும் விழிப்புணர்வு முகாம் வருகிற 9-ந் தேதி கலெக்டர் தலைமையில் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் (புதிய கட்டிடம் 3-வது தளத்தில்) பகல் 11 மணியளவில் நடைபெற உள்ளது. எனவே இந்த விழிப்புணர்வு முகாமில் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மக்கள் அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறலாம் என கலெக்டர் மெர்சி ரம்யா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.


Next Story