சுயதொழில் தொடங்க விருப்பம் உள்ள ஆதி திராவிடர்கள் தாட்கோ திட்டங்களில் பயன் பெற விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் தகவல்


சுயதொழில் தொடங்க விருப்பம் உள்ள ஆதி திராவிடர்கள் தாட்கோ திட்டங்களில் பயன் பெற விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் தகவல்
x

சுயதொழில் தொடங்க விருப்பம் உள்ள ஆதி திராவிடர்கள் தாட்கோ திட்டங்களில் பயன் பெற விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார். திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

திருவள்ளூர்

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம் (தாட்கோ) மூலம் செயல்படுத்தப்படும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான பொருளாதார மேம்பாட்டு திட்டங்களுக்கு குடும்ப ஆண்டு வருமான உச்ச வரம்பு ரூ. 2 லட்சத்தில் இருந்து ரூ. 3 லட்சமாக உயர்த்தி தற்போது அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் வசிக்கும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி இனத்தவர் அதிக எண்ணிக்கையில் தாட்கோ மூலம் செயல்படுத்தப்படும் பொருளாதார மேம்பாட்டு திட்டங்களில் பயனடைய தாட்கோ இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

பொருளாதார மேம்பாட்டு திட்டங்களின் கீழ் நிலம் வாங்கும் திட்டம், நில அபவிருத்தி திட்டம், தொழில் முனைவோர் திட்டம், இளைஞர்களுக்கான சுய வேலைவாய்ப்பு திட்டம், மருந்தகம் அமைத்தல், மருத்துவ மையம், மருந்தியல், கண் கண்ணாடியகம், முட நீக்கு மையம், ரத்த பரிசோதனை நிலையம் அமைத்தல் மற்றும் மேம்படுத்துதல், சுய உதவி குழுக்களுக்கான பொருளாதார கடன் உதவி திட்டம், ஆதிதிராவிடர் இனத்தவராக இருப்பின் http://application.tahdco.com மற்றும் பழங்குடியினராக இருப்பின் http://fast.tahdco.com என்ற தாட்கோ இணையதளத்தில், ரேஷன்கார்டு அல்லது இருப்பிடச்சான்று, ஜாதி சான்றிதழ், வருமான சான்றிதழ், (ஓராண்டுக்குள் பெற்று இருக்க வேண்டும்) ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, விலை புள்ளி, ஜி.எஸ்.டி எண்ணுடன், திட்ட அறிக்கை, ஓட்டுனர் உரிமம் வாகன கடனுக்கு மட்டும், பாஸ்போர்ட் அளவு புகைப்படம், கல்வித்தகுதி சான்றிதழ், வங்கி கணக்கு புத்தகம் முதல் பக்கம் போன்ற ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் இணையதளம் மூலம் விண்ணப்பங்களை 24 மணி நேரமும் பதிவு செய்யலாம்.

வயது வரம்பு 18 முதல் 65 வரை ஆகும். மேலும் விவரங்களுக்கு திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட மேலாளர் தாட்கோ அலுவலகத்தை அணுகலாம்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story