ஆதித்தனார் கல்லூரியில் பயின்றோர் கழக செயற்குழு கூட்டம்


ஆதித்தனார் கல்லூரியில் பயின்றோர் கழக செயற்குழு கூட்டம்
x
தினத்தந்தி 24 July 2023 6:45 PM GMT (Updated: 24 July 2023 6:46 PM GMT)

திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் பயின்றோர் கழக செயற்குழு கூட்டம் நடந்தது.

தூத்துக்குடி

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரி பயின்றோர் கழகம் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு மாதம் 15-ந் தேதி ஆண்டு விழா நடத்தி வருகிறது. அதன் ஒரு அங்கமாக திருச்செந்தூர் தாலுகா தமிழ் வழி உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு பேச்சு போட்டியும், ஆதித்தனார் கல்லூரி இளநிலை, முதுநிலை மாணவர்களுக்கு கட்டுரை போட்டியும் நடத்தப்பட்டு ஆண்டு விழாவில் ரொக்கப்பரிசுகள் வழங்கப்பட உள்ளது. ஆதித்தனார் கல்லூரியில் ஆகஸ்டு 8-ந் தேதி மதியம் 2 மணிக்கு பள்ளி மாணவர்களுக்கான பேச்சு போட்டியும், 9-ந் தேதி மதியம் 2 மணிக்கு கல்லூரி மாணவர்களுக்கான கட்டுரை போட்டியும் நடைெபறுகின்றன.

பயின்றோர் கழக தலைவரும், கல்லூரி முதல்வருமான து.சி.மகேந்திரன் தலைமையில் கல்லூரியில் நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் பயின்றோர் கழக துணை தலைவர் ஜெயசிங் சாம்ராஜ், பொருளாளர் சித்திரை ராஜா, உறுப்பினர்கள் பகவதி பாண்டியன், அலெக்சாண்டர், மும்பை மரிய சாமுவேல், கணபதி, ராஜேந்திரன், கதிரேசன், செண்பகா தேவி, மூகாம்பிகை, பாலமுருகன் உள்பட பலர் பங்கேற்றனர். பயின்றோர் கழக இணைச் செயலாளர் தர்மபெருமாள் நன்றி கூறினார்.

கூட்டத்தில் பணிநிறைவு பெற்ற பேராசிரியர்கள், அலுவலர்கள், முனைவர் பட்டம் பெற்றவர்கள், விருது பெற்றவர்களுக்கு நினைவு பரிசு வழங்கி பாராட்டுதல், செப்டம்பர் 24, 27-ந் தேதிகளில் கல்லூரி நிறுவன தலைவர் பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மற்றும் கல்லூரி நிறுவனர் சி.பா.ஆதித்தனார் ஆகியோரின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட கல்லூரி மாணவர்களுக்கு பேச்சு போட்டி, வினாடி-வினா போட்டிகள் நடத்துதல் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


Next Story