'ஆதித்யா எல்-1' விண்கல திட்ட இயக்குனர் தென்காசி பெண் விஞ்ஞானி


ஆதித்யா எல்-1 விண்கல திட்ட இயக்குனர் தென்காசி பெண் விஞ்ஞானி
x

நாளை (சனிக்கிழமை) விண்ணில் ஏவப்படும் ‘ஆதித்யா எல்-1’ விண்கல திட்ட இயக்குனராக தென்காசி பெண் விஞ்ஞானி நிகர் ஷாஜி பணியாற்றுகிறார்.

நிலவின் தென்துருவத்துக்கு சந்திரயான்-3 விண்கலம் வெற்றிகரமாக அனுப்பப்பட்டதை தொடர்ந்து, சூரியனை ஆய்வு செய்வதற்காக 'ஆதித்யா எல்-1' விண்கலம் நாளை (சனிக்கிழமை) காலை 11.50 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-57 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்படுகிறது.

'ஆதித்யா எல்-1' விண்கலத்தின் திட்ட இயக்குனராக பெண் விஞ்ஞானி நிகர் ஷாஜி உள்ளார். இவரது சொந்த ஊர் தென்காசி மாவட்டம் செங்கோட்டை சுலைமான்நபி பள்ளிவாசல் ஜமாத் பகுதி ஆகும். இவருடைய பெற்றோர் ஷேக் மீரான்- சைத்தூன் பீவி.

செங்கோட்டை எஸ்.ஆர்.எம். பள்ளிக்கூடத்தில் பயின்ற நிகர் ஷாஜி, பிளஸ்-2 தேர்வில் கல்வி மாவட்டத்தில் முதலிடம் பிடித்தார். பின்னர் நெல்லை அரசு என்ஜினீயரிங் கல்லூரியில் படித்த இவர் பின்னர் மேல்படிப்பை பிர்லா இன்ஸ்டிடியூட் டெக்னாலஜி நிறுவனத்தில் பயின்று, இஸ்ரோவில் பணியில் சேர்ந்தார்.

தொடர்ந்து பல்வேறு ஆராய்ச்சி பணிகளுக்காக அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் மற்றும் பல்வேறு நாடுகளுக்கும் சென்றுள்ளார். இவருடைய கணவர் ஷாஜகான், துபாயில் என்ஜினீயராக உள்ளார். இவர்களுடைய மகன் முகம்மது தாரிக், நெதர்லாந்து நாட்டில் விஞ்ஞானியாக உள்ளார். மகள், தஸ்நீம் பெங்களூரில் படித்து வருகிறார்.

நிகர் ஷாஜியின் அண்ணன் ஷேக் சலீம், ஆழ்வார்குறிச்சி பரமகல்யாணி கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் செங்கோட்டையில் வசித்து வருகிறார்.

'ஆதித்யா எல்-1' விண்கலமும் முழுக்க இந்தியாவிலே தயாரிக்கப்பட்டது. இத்திட்டம் வெற்றிகரமாக நிறைவேறினால் அமெரிக்கா, ரஷியா, ஐரோப்பிய கூட்டமைப்பை தொடர்ந்து சூரியனை ஆய்வு மேற்கொள்ளும் 4-வது நாடாக இந்தியா சாதனை புரியும் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story