முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழக்குகளில் தீர்ப்பு ஒத்திவைப்பு


முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழக்குகளில் தீர்ப்பு ஒத்திவைப்பு
x

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தாக்கல் செய்த மனுக்கள் மீதான தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், தன் மீதான மாநகராட்சி டெண்டர் முறைகேடு வழக்கு மற்றும் சொத்துக்குவிப்பு வழக்கை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த மனு நீதிபதி பி.என்.பிரகாஷ், நீதிபதி டீக்காராமன் ஆகியோர் அடங்கிய அமர்வில் கடந்த மாதம் விசாரணைக்கு வந்தது. அப்போது எஸ்.பி.வேலுமணி தரப்பில், "ஒளிவு மறைவின்றி டெண்டர் கோரப்பட்டது. இதில் தனக்கு எந்த பங்கும் இல்லை" எனவும் முதற்கட்ட விசாரணைக்கு மட்டுமே அனுமதி கோரப்பட்டதாகவும், வழக்கு பதிய அனுமதி பெறவில்லை என்றும் வாதிடப்பட்டது.

இதையடுத்து தமிழக அரசு தரப்பில் ஆஜரான அரசு வழக்கறிஞர் சண்முகசுந்தரம், டெண்டர் முறைகேடு புகார்கள் தொடர்பான விசாரணை நடந்து கொண்டிருந்த போது மத்திய கணக்கு தணிக்கைக்குழு அறிக்கை வெளியானதாகவும், அதில் ஒப்பந்தங்கள் ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்துள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் விளக்கமளித்தார்.

முதல் தகவல் அறிக்கை என்பது வழக்கின் ஆரம்பகட்டம் என்றும், ஆரம்பகட்டத்திலேயே வழக்கை ரத்து செய்யக்கோர முடியாது என்றும் தெளிவுபடுத்தினார். இந்த வழக்கில் மற்றொரு புகார்தாரரான அறப்போர் இயக்கம் தரப்பில் வாதங்களை முன்வைக்க ஏதுவாக விசாரணையை நவம்பர் 8-ந்தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

அதன்படி, அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு உள்நோக்கத்துடன் வழக்குப்பதிவு செய்துள்ளதாக வேலுமணி தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதம் தவறு என்றும் கோவையில் 47 டெண்டர்கள் அமைச்சரின் உறவினர்களுக்கு சொந்தமான இரு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டன என அறப்போர் இயக்கம் தரப்பில் வாதிடப்பட்டது.

இதையடுத்து டெண்டர் ஒதுக்கியதில் முறைகேடு, சொத்து குவித்ததாக பதிவு செய்யப்பட்ட 2 வழக்குகளை ரத்து செய்யக் கோரி முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடர்ந்த வழக்குகளின் தீர்ப்பு, தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


Next Story