'அ.தி.மு.க. சார்பில் போராட்டம் நடத்தப்படும்' எடப்பாடி பழனிசாமி அறிக்கை


அ.தி.மு.க. சார்பில் போராட்டம் நடத்தப்படும் எடப்பாடி பழனிசாமி அறிக்கை
x

காலதாமதமாக வரி செலுத்தினால் விதிக்கப்படும் ஒரு சதவீத அபராதத்தை ரத்து செய்யாவிட்டால் அ.தி.மு.க. சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சென்னை,

'ரோம் நகரம் தீப்பற்றி எரியும்போது, நீரோ மன்னன் பிடில் வாசித்த கதையாக', தமிழக மக்கள் நலனில் துளியும் அக்கறையின்றி, அவர்கள் படும் துயரங்களை எண்ணிப்பார்க்காமல் மனம்போன போக்கில் செயல்படும், நிர்வாகத் திறனற்ற முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான விடியா தி.மு.க. அரசு பதவியேற்ற கடந்த 29 மாதங்களாக, மக்கள் மீது சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு, பால் மற்றும் பால் பொருட்களின் விலை உயர்வு, அனைத்து அத்தியாவசிய மளிகைப் பொருட்களின் விலை உயர்வு உள்ளிட்ட கட்டண உயர்வுகள் மூலம் மென்மேலும் மக்களை துன்புறுத்தி வருகிறது.

இந்த நிலையில் தற்போது, தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் நடப்பு நிதியாண்டில் (2023-2024) வீட்டுவரி, சொத்துவரி முதல் தவணை மற்றும் இரண்டாம் தவணைகளை, மாநகராட்சி எல்லைக்குள் வசிக்கும் மக்கள் காலதாமதமாக செலுத்தினால் ஒரு சதவீதம் அபராதத்தொகை வசூலிக்கப்படும் என்று சட்டம் கொண்டுவந்து மக்களை மேலும் வாட்டி வதைக்கும் விடியா தி.மு.க. அரசின் இச்செயலுக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இரட்டை வேடம்

மு.க.ஸ்டாலின் எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது, வரி உயர்வுக்காக பதாகைகளை ஏந்தி எதிர்ப்பு தெரிவித்தார். மேலும், 2021-ம் ஆண்டு தேர்தலின்போது தி.மு.க. வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், 'கொரோனாவால் பாதிக்கப்பட்ட பொருளாதாரம் மீண்டும் மேம்படும் வரையில் சொத்து வரி உயர்த்தப்படமாட்டாது என வாக்குறுதி அளித்துவிட்டு தற்போது வரியை உயர்த்தியதோடு மட்டுமல்லாமல், தாமதத்திற்கு ஒரு சதவீதம் அபராதமும் விதிக்கப்படுகிறது. ஆகவே இந்த விடியா தி.மு.க. அரசின் இரட்டை வேடத்தை தமிழக மக்கள் நன்கு புரிந்துகொள்ள வேண்டும்.

எனது தலைமையிலான ஜெயலலிதா அரசில், கொரோனா பேரிடர் காலத்தில் கடுமையான நிதி நெருக்கடி ஏற்பட்ட நிலையிலும் எந்தவித வரி உயர்வுகளும், கட்டண உயர்வுகளும் மக்கள் மீது திணிக்காமல் காத்து நின்றது.

அ.தி.மு.க. போராட்டம்

ஏற்கனவே, பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகியுள்ள பொதுமக்களின் மனநிலையை அறிந்து, அவர்களின் நலனை கருத்தில்கொண்டு, தற்போது விடியா தி.மு.க. அரசால் புதிதாக விதிக்கப்பட்டுள்ள ஒரு சதவீத அபராத கட்டணத்தை ரத்து செய்ய வேண்டியும், உயர்த்தப்பட்ட வரி உயர்வுகளை குறைக்க எதிர்க்கட்சி உள்ளிட்ட அனைத்து தரப்பினரின் கோரிக்கையை உதாசீனப்படுத்தி, சர்வாதிகார மனப்பான்மையோடு மறுபரிசீலனை செய்யாத தி.மு.க. அரசை வன்மையாக கண்டிக்கிறேன்.

மேலும், தமிழகம் முழுவதும் பொதுமக்களை ஒன்று திரட்டி தி.மு.க. அரசைக் கண்டித்து அ.தி.மு.க.வின் சார்பில் போராட்டம் நடத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story