மயிலம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தை அ.தி.மு.க.வினர் முற்றுகையிட முயற்சி


மயிலம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தை அ.தி.மு.க.வினர் முற்றுகையிட முயற்சி
x
தினத்தந்தி 24 Nov 2022 6:45 PM GMT (Updated: 24 Nov 2022 6:47 PM GMT)

மயிலத்தில் குளத்து நீரை வெளியேற்றிய விவகாரத்தில் ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற அ.தி.மு.க.வினர் அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

விழுப்புரம்

மயிலம்

படித்துறை அமைக்க

மயிலம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அவ்வையார்குப்பம் ஊராட்சியில் உள்ள குளத்தில் படித்துதுறை அமைப்பதற்காக நிரம்பி இருந்த குளத்து நீா் டிராக்டர் எந்திரம் மூலம் அப்புறப்படுத்தப்பட்டது. இதற்கு எதிா்ப்பு தெரிவித்த அந்த பகுதி மக்கள் வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் நேற்று காலை மயிலம் மேற்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் புலியனூர் விஜயன், கிழக்கு ஒன்றிய செயலாளர் சேகரன், மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் வக்கீல் பாஸ்கர், மயிலம் மேற்கு ஒன்றிய அ.தி.மு.க. எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் செந்தில்குமார், மாவட்ட பிரதிநிதி ரெட்டணை ராமசாமி உள்பட 50-க்கும் மேற்பட்டோர் மயிலம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் முற்றுகையிட முயன்றனர்.

பேச்சுவார்த்தை

இதையடுத்து அங்கு பணியில் இருந்த மண்டல அலுவலர், உதவி செயற்பொறியாளர் பாஸ்கர் மற்றும் அலுவலர்கள் அ.தி.மு.க.வினரை அழைத்து பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அ.தி.மு.க.வினர் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதற்கு உதவி செயற்பொறியாளர் பாஸ்கர், தற்போது பணியை நிறுத்தி வைத்துள்ளோம். மேலும் இந்த சம்பவம் குறித்தும், ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்கவும் மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்துள்ளோம் எனகூறினர். இதையடுத்து அ.தி.மு.க. வினர் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story