'அ.தி.மு.க. மீண்டும் ஆட்சிக் கட்டிலில் அமரும்' எடப்பாடி பழனிசாமி அறிக்கை


அ.தி.மு.க. மீண்டும் ஆட்சிக் கட்டிலில் அமரும் எடப்பாடி பழனிசாமி அறிக்கை
x

‘மதுரை மாநாட்டின் வெற்றி நாடாளுமன்ற - சட்டமன்ற தேர்தல்களுக்கு அடித்தளம்' என்றும், ‘அ.தி.மு.க. மீண்டும் ஆட்சிக் கட்டிலில் அமரும்' என்றும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சென்னை,

அ.தி.மு.க. வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாடு, எம்.ஜி.ஆர்.-ஜெயலலிதா ஆசியுடன் கடந்த 20-ந்தேதி மதுரையில், இந்தியாவே திரும்பிப்பார்க்கும் வகையில் 'இதுபோல் பேரெழுச்சி இதுவரை கண்டதுண்டா?' என அரசியல் வரலாற்று ஆய்வாளர்களும் வியக்கும் வகையில் பெருவெற்றி அடைந்திருக்கிறது என்பதை, கட்சியின் பொதுச்செயலாளர் என்ற முறையில் நான் பெருமகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன்.

கட்சியில் தொன்றுதொட்டு வந்த, அஞ்சாத நெஞ்சுறுதியோடு களம் வந்து நின்ற லட்சோப லட்சம் தொண்டர்கள் இந்த மாநாட்டை வெற்றி மாநாடாக மாற்றி இருக்கிறார்கள். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரது காலத்தில், எப்படி அலை அலையாய் தொண்டர்கள் கூடி கொள்கை முழக்கமிடுவார்களோ, அதைப்போலவே எனது அன்பான அழைப்பினை ஏற்று கடல் அலை போல், அலை அலையாக ஆர்ப்பரித்து வந்து கலந்துகொண்ட கட்சி தொண்டர்கள் கூட்டம், எதிரிகளுக்கும், துரோகிகளுக்கும், நம்முடைய ராணுவ கட்டுக்கோப்பையும், விசுவாசத்தையும் காட்டி இருக்கிறது. தமிழக மக்களின் நெஞ்சங்களில் எல்லாம் பெரும் நம்பிக்கையை விதைத்திருக்கிறது.

தீய சக்திகளின் கூட்டம்

அ.தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கட்டிலில் அமரும், தமிழ்நாட்டு மக்களின் துயர் விரைவில் தீரும் என்ற அறைகூவலை நம் மாநாட்டின் வெற்றி உறுதிப்படுத்தி இருக்கிறது. நமது கட்சிக்கொடி, மதுரை மண்ணில் லட்சோப லட்சம் தொண்டர்களின் மத்தியில் அசைந்தாடிய காட்சிகள், ஒவ்வொரு தொண்டரையும் உணர்ச்சி வெள்ளத்தில் மூழ்கடித்தது. ஜெயலலிதா கூறியது போல், 'அ.தி.மு.க. இன்னும் பல நூறு ஆண்டு காலம் மக்களுக்காகவே தொடர்ந்து பணியாற்றும் என்கின்ற உறுதியை பறைசாற்றி இருக்கிறது.

அ.தி.மு.க.வின் மூன்றாம் தலைமுறை எழுச்சியைக்கண்டு நடுங்கிப் போயிருக்கிற தீய சக்திகளின் கூட்டம், காவல் துறையை வைத்து, கட்சி மாநாட்டில் தொண்டர்கள் கலந்துகொள்வதை தடுக்கும் வகையில் பல்வேறு துயரங்களைத் தந்தது. பல இடங்களில் தொண்டர்கள் வந்த வாகனங்களை 30 கி.மீ.க்கு முன்பே நிறுத்தி, திசை திருப்பி அட்டூழியம் செய்தனர். ஆனாலும் மகளிர் மற்றும் குழந்தைகளுடன் குடும்பம் குடும்பமாக நடந்தே வந்து மாநாட்டில் கலந்துகொண்டதை கண்டு எதிரிகள் நடுங்கிப்போய் இருக்கின்றனர்.

தேர்தல்களுக்கு அடித்தளம்

காவல் துறையினர் பல்வேறு இடையூறுகளை செய்தனர். அதேபோல், துரோகிகளும் சதி வேலைகளில் ஈடுபட்டனர். இவை அனைத்தையும் தாண்டி, கட்சியினர் மதுரை மாநாட்டில் கலந்துகொண்டது நமக்குக் கிடைத்திட்ட மாபெரும் வெற்றி. இந்த வரலாற்று வெற்றி, 2024-ல் நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தலுக்கான வெற்றிக்கும், அதனைத்தொடர்ந்து நடைபெற உள்ள சட்டமன்றப் பொதுத்தேர்தலுக்கான வெற்றிக்கும் அடித்தளமாக அமைந்துள்ளன.

15 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்ட இந்த மாநாட்டில், எந்த ஒரு சிறு அசம்பாவிதமும் நடைபெறவில்லை. ராணுவக் கட்டுப்பாடு கொண்ட இயக்கம் அ.தி.மு.க. என்பதற்கு இதைவிட வேறென்ன சாட்சி வேண்டும்? இந்திய அரசியல் வரலாற்றில் இன்னொரு கட்சி இப்படியொரு மாநாட்டை நடத்தியது உண்டா? என நினைத்து, நினைத்துப் பெருமிதம் அடைகிறேன்.

பொதுச்செயலாளராக முதல் மாநாடு

கட்சி நிர்வாகிகள், கட்சி தொண்டர்களின் பேராதரவோடு, அ.தி.மு.க. பொதுச்செயலாளராகப் பொறுப்பேற்று நடத்திய முதல் மாநாட்டிற்கு, என்னுடைய அன்பான அழைப்பினை ஏற்று குடும்பம், குடும்பமாக, குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு, அனைத்து இடையூறுகளையும் தாண்டி மாநாட்டிற்கு வந்து கலந்துகொண்டு கொள்கை முழக்கமிட்ட கட்சி நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் இதயப்பூர்வமான நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்வதோடு, கட்சியின் தொண்டர்கள் ஒவ்வொருவரையும் ஆரத்தழுவி, அரவணைத்து எனது நன்றியை உரித்தாக்குகிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story