அ.தி.மு.க எடப்பாடி பழனிசாமி தாத்தா ஆரம்பித்த கட்சி அல்ல - ஓ.பன்னீர்செல்வம் கோபம்


அ.தி.மு.க எடப்பாடி பழனிசாமி தாத்தா ஆரம்பித்த கட்சி அல்ல - ஓ.பன்னீர்செல்வம் கோபம்
x

சுப்ரீம் கோர்ட் தீர்ப்பால் எங்களுக்கு எந்த பின்னடைவும் இல்லை. நாங்கள் மக்களை நாடி செல்வதில் உறுதியாக இருக்கிறோம் என ஓ.பன்னீர்செல்வம் கூறினார்

சென்னை

அ.தி.மு.க. பொதுக்குழு தொடர்பான வழக்கில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக நேற்றைய தினம் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது. இதனை எடப்பாடி தரப்பு மிகவும் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர்.

இந்த நிலையில் ஓ. பன்னீர்செல்வம் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சுப்ரீம் கோர்ட் தீர்ப்பால் எங்களுக்கு எந்த பின்னடைவும் இல்லை. நாங்கள் மக்களை நாடி செல்வதில் உறுதியாக இருக்கிறோம்.

அப்போது குறுக்கிட்ட செய்தியாளர்கள் 'அம்மா முன்னேற்ற கழகம்' என்ற கட்சியை தொடங்கப் போவதாக செய்திகள் வெளியாகிறதே? எனக் கேட்டனர்.அதற்கு, பைத்தியக்காரர்கள் அப்படி சொல்வர். அரசியல்வாதிகள் அப்படி சொல்ல மாட்டார்கள் என வைத்திலிங்கம் தெரிவித்தார்

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் 50 ஆண்டுகளாக இந்த கட்சியை உயிரை கொடுத்து காப்பாற்றினார். எம்.ஜி.ஆர். தான் கட்சியின் சட்ட விதிகளை வகுத்தார். அதனை ஜெயலலிதா காப்பாற்றினார். இந்த 2 தலைவர்கள் பின்பற்றிய விதிகளை காப்பாற்ற வேண்டும் என்று தான் நாங்கள் போராடி கொண்டிருக்கிறோம்.

ஜெயலலிதாக 30 ஆண்டுகளாக கட்சியின் பொதுச்செயலாளராக இருந்துள்ளார். இந்த காலத்தில் பல வேதனைகளையும், சோதனைகளையும் அவர் சந்தித்தார். 96 வழக்குகளை எதிர்கொண்டார். இதனால் ஜெயலலிதா காலமான பிறகு அவர் தான் கட்சியின் நிரந்தர பொதுச்செயலாளர் என தீர்மானம் நிறைவேற்றினோம். அந்த தீர்மானத்தை ரத்து செய்ய யாருக்கு அதிகாரம் இருக்கிறது? யாருக்குமே கிடையாது.

இந்த கட்சியை தொண்டர்களின் இயக்கமாக எம்.ஜி.ஆர். உருவாக்கினார். இன்று வரை அப்படித்தான் தொண்டர்களை காப்பாற்றும் இயக்கமாக உள்ளது. மேலும் கட்சியின் உச்சபதவியில் இருப்பவர்களை கட்சியின் அடிப்படை உறுப்பினர்கள் தேர்வு செய்ய வேண்டும் என்று சட்டவிதியை உருவாக்கினார். இந்த விதி உலகத்தில் எந்த கட்சியிலும் இல்லை.

ஆனால் இன்றைக்கு என்ன நிலைமை உள்ளது. 10 மாவட்ட செயலாளர்கள் முன்மொழிய வேண்டும். 10 மாவட்ட செயலாளர்கள் வழி மொழிய வேண்டும் என்கின்றனர். இவ்வாறு தான் தலைமை கழக தலைவரை தேர்வு செய்ய வேண்டுமாம். இது(கைகளை ரூபாய் நோட்டுகள் எண்ணுவது போல் சைகை காட்டி) இருந்தால் தான் நடக்கும். எப்படி கூவத்தூரில் நடந்ததோ அதேபோல் கட்சியை கைப்பற்றி கைக்குள் வைத்து கொள்ள நினைக்கிறார்கள்.

இது ஓபிஎஸ் தாத்தா மாடசாமி தேவர் ஆரம்பித்த கட்சி அல்ல. பழனிச்சாமியின் தாத்தா ஆரம்பித்த கட்சி அல்ல. தொண்டர்களுக்காக எம்ஜிஆர் ஆரம்பித்த கட்சி. அதற்காக தான் நாங்கள் தர்மயுத்தத்தை தொடங்கி உள்ளோம். நாங்கள் மக்கள் மன்றத்தை நாடிச்செல்ல உள்ளோம். அவர்கள் சரியான தீர்ப்பை வழங்குகிறார்கள்'' என்றார்.


Next Story