அ.தி.மு.க. சாதி-மதங்களுக்கு அப்பாற்பட்ட இயக்கம் குறிப்பிட்ட ஒரு சமூகத்தை சேர்ந்தவர் முதல்-அமைச்சராக வரவேண்டும் என கூறவில்லை முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ. பேட்டி

முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ. பேட்டி
குறிப்பிட்ட ஒரு சமூகத்தை சேர்ந்தவர் முதல்-அமைச்சராக வரவேண்டும் என தான் கூறவில்லை எனவும், அ.தி.மு.க. சாதி-மதங்களுக்கு அப்பாற்பட்ட இயக்கம் என்றும் கோபியில் முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ. கூறினார்.
பேட்டி
திருவண்ணாமலை மாவட்டம் போளூரில் நடந்த அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும், ஈரோடு மாவட்டம் கோபி தொகுதி எம்.எல்.ஏ.வுமான கே.ஏ.செங்கோட்டையன் குறிப்பிட்ட ஒரு சமுதாயத்தை சேர்ந்த ஒருவர்தான் முதல்-அமைச்சராக வர முடியும் என்று பேசியதாக சர்ச்சை எழுந்தது.
இதற்கு ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளரான கோவை செல்வராஜ் செய்தியாளர் சந்திப்பின் போது கண்டனம் தெரிவித்து இருந்தார். கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ. கட்சியில் இருந்து விலக வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
ஆனால் தான் அவ்வாறு பேசவில்லை என கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ. மறுத்துள்ளார். இதுதொடர்பாக ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு நேற்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பேசவில்லை
போளூரில் நடந்த கூட்டத்தில் நான் தெளிவாக பேசி உள்ளேன். குறிப்பிட்ட ஒரு சமுதாயத்தை சேர்ந்தவர்தான் முதல்-அமைச்சராக வரவேண்டும் என ஒரு வரி கூட நான் அப்படி பேசவில்லை. அதை புரிந்து கொண்டு பேசினால் நலமாக இருக்கும்.
நான் கோவை செல்வராஜ் பற்றி சொல்ல விரும்பவில்லை. ஏனென்றால் என்னுடைய தகுதிக்கு நான் அவருக்கு பதில் கூறுவது சரியாக இருக்காது. அவருக்கு பதில் கூறினால் என் தரம் குறைந்து விடும். நான் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர் என்பதாலும், அவர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர் என்பதாலும் தான் இந்த குற்றச்சாட்டை கூறியுள்ளார்.
சித்தரிக்கப்பட்ட வார்த்தைகள்
என்னை பொறுத்தவரை தெளிவாக அங்கு சொல்லப்பட்ட வார்த்தைகள் வேறு. சித்தரிக்கப்பட்ட வார்த்தைகள் வேறு. ஒரு சமுதாயத்தை சார்ந்து இருக்கிற ஒருவர் தற்காலிக பொதுச்செயலாளராக இருக்கும் போது சிலர் என்னிடம் உங்களுக்கு ஏன் அந்த பதவியை கொடுக்கவில்லை என்று கேட்கின்றனர். இது அ.தி.மு.க. பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர். வழியில் வந்து இருக்கும் இயக்கம். சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டு இயங்கி வருகிறது.
பதில் கூறுகிறேன்
அனைத்து இனத்தை சார்ந்தவர்களுக்கும் வாய்ப்பு அளிக்க வேண்டும் என்பதால் தான் வாய்ப்பு எனக்கு அளிக்கவில்லை என்று கூறினேன். சொல்லாத கருத்துகளை சொன்னதாக செய்திகள் வந்தது. அதன் பிறகு செல்வராஜ் கொச்சையாக பேசினார். அப்படி பேசுவது அவரது வழக்கம் தான்.
அவர் முழுமையாக வீடியோவை பார்த்துவிட்டு கேட்கட்டும். அதன் பிறகு நான் பதில் கூறுகிறேன்.
இவ்வாறு கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ. கூறினார்.