கள்ளக்காதல் விவகாரத்தில் வாலிபர் தீக்குளிப்பு


கள்ளக்காதல் விவகாரத்தில் வாலிபர் தீக்குளிப்பு
x

சாணார்பட்டி அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் வாலிபர் தீக்குளித்தார். காதலியையும் கட்டிப்பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

திண்டுக்கல்

கள்ளக்காதல்

மதுரை அருகே உள்ள பேரையூரை சேர்ந்தவர் சந்துரு (வயது 23). இவர் திருப்பூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். அவருடைய தாயாரின் ஊர், திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே உள்ள தவசிமடை வாடிப்பட்டி காலனி ஆகும்.

இதனால் சந்துரு, வாடிப்பட்டி காலனியில் உள்ள தனது தாயாரின் உறவினர் வீடுகளுக்கு அடிக்கடி சென்று வந்தார். அப்போது அதே பகுதியில் வசிக்கிற உறவினர் வாசிமலை மனைவியும், 3 குழந்தைகளின் தாயுமான புவனேஸ்வரி (30) என்பவருடன் சந்துருவுக்கு பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது.

இவர்கள் 2 பேரும், அவ்வப்போது தனிமையில் சந்தித்து தங்களது காதலை வளர்த்து வந்தனர். இதற்கிடையே புவனேஸ்வரிக்கு செலவுக்கு பணமும் சந்துரு கொடுத்ததாக கூறப்படுகிறது.

பெட்ரோல் ஊற்றி தீக்குளிப்பு

இந்தநிலையில் திடீரென்று சந்துருவுடன் பேசுவதையும், சந்திப்பதையும் புவனேஸ்வரி தவிர்த்து வந்தார். இது தொடர்பாக கேட்பதற்கு சந்துரு நேற்று அதிகாலை புவனேஸ்வரி வீட்டுக்கு சென்றார். அங்கிருந்த புவனேஸ்வரியிடம் தன்னிடம் பேசாததற்கான காரணம் குறித்து சந்துரு கேட்டார்.

மேலும், தான் கொடுத்த பணத்தையும் அவர் திருப்பி கேட்டார். அப்போது அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. இதனைக்கண்ட அக்கம்பக்கத்தினர் அவர்களை விலக்கி விட்டனர்.

இந்தநிலையில் அங்கிருந்து சென்ற சந்துரு சிறிதுநேரம் கழித்து மீண்டும் புவனேஸ்வரி வீட்டுக்கு கையில் பெட்ரோல் கேனுடன் வந்தார். யாரும் எதிர்பாராத விதமாக அவர் தான் வைத்திருந்த பெட்ரோலை தனது உடலில் ஊற்றி தீ வைத்தார்.

காதலியை கட்டிப்பிடித்தார்

கண்இமைக்கும் நேரத்தில் அவரது உடலில் மள, மளவென தீப்பற்றி எரிந்தது. இதனால் வலியால் அவர் அலறினார். அந்தநேரத்தில் அங்கு நின்று கொண்டிருந்த புவனேஸ்வரியை எரியும் தீயுடன் திடீரென சந்துரு கட்டிப்பிடித்தார். இதில் புவனேஸ்வரியின் உடலிலும் தீப்பற்றியது. இதனையடுத்து 2 பேரும் அலறினர். அந்த சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து தீயை அணைத்தனர்.

பின்னர் தீக்காயம் அடைந்து, உயிருக்கு போராடிய 2 பேரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு 2 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து சாணார்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கள்ளக்காதல் விவகாரத்தில் வாலிபர் தீக்குளித்ததோடு, காதலியையும் கட்டிப்பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story