20 ஆண்டுகளுக்கு பின் தீர்த்தக்குளம் தூர்வாரும் பணி


20 ஆண்டுகளுக்கு பின் தீர்த்தக்குளம் தூர்வாரும் பணி
x
தினத்தந்தி 22 Sep 2023 6:45 PM GMT (Updated: 22 Sep 2023 6:45 PM GMT)

20 ஆண்டுகளுக்கு பின் தீர்த்தக்குளம் தூர்வாரும் பணி நடந்தது.

ராமநாதபுரம்

தொண்டி,

திருவாடானை தாலுகா திருவெற்றியூரில் சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட பாகம்பிரியாள் சமேத வல்மீக நாதசாமி கோவில் உள்ளது.

இக்கோவிலின் முன்பு வாசுகி தீர்த்தக்குளம் அமைந்துள்ளது. தினமும் இக்கோவிலுக்கு வரும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வாசுகி தீர்த்த குளத்தில் நீராடிய பின்னரே சுவாமி தரிசனம் செய்வது வழக்கம். இந்த குளம் சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு தூர்வாரபட்டுள்ளது. இந்நிலையில் இந்த குளம் மாசடைந்து மீன்கள் செத்து மிதந்தன. தண்ணீர் துர்நாற்றம் வீசியது.

தொடர்ந்து தேவஸ்தான நிர்வாகம் சார்பில் தீர்த்த குளத்தை தூர்வார முடிவு செய்து குளத்தில் இருந்த தண்ணீரை மோட்டார் மூலம் வெளியேற்றினர். பின்னர் பொக்லைன் எந்திரம் மூலம் தீர்த்த குளம் தூர்வாரும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் மழைநீர் குளத்தில் நிறைந்து தூர்வாரும் பணிக்கு இடையூறு ஏற்படுத்தியது. நேற்று மீண்டும் தூர்வாரும் பணி தொடங்கியது.

இந்த பணிகளை இந்து சமய அறநிலையத்துறை செயற்பொறியாளர் லீலாவதி, சிவகங்கை தேவஸ்தான மேலாளர் இளங்கோ, சரக கண்காணிப்பாளர் செந்தில்குமார், கவுரவ கண்காணிப்பாளர் சுந்தரராஜன், ஒன்றிய கவுன்சிலர் விஜயகதிரவன் ஆகியோர் பார்வையிட்டனர்.

அப்போது வாசுகி தீர்த்த குளத்தை தூர்வாருவதற்கு ஒன்றிய கவுன்சிலர் விஜயகதிரவன் தேவையான நிதி உதவியை தனது சொந்த செலவில் அளிப்பதாக உறுதி அளித்தார்.


Next Story