சிறுவர்கள் உள்பட 7 பேர் அகதிகளாக தனுஷ்கோடி வருகை


சிறுவர்கள் உள்பட 7 பேர் அகதிகளாக தனுஷ்கோடி வருகை
x

இலங்கையில் இருந்து சிறுவர்கள் உள்பட 7 பேர் அகதிகளாக தனுஷ்கோடி வந்தனர்.

ராமநாதபுரம்

ராமேசுவரம்,

இலங்கையில் இருந்து சிறுவர்கள் உள்பட 7 பேர் அகதிகளாக தனுஷ்கோடி வந்தனர்.

2 குடும்பத்தினர்

இலங்கையில் ஏற்பட்ட கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக இதுவரையிலும் 83 பேர் அகதிகளாக தமிழகம் வந்து உள்ளனர். இந்த நிலையில் இலங்கையில் இருந்து 2 குடும்பங்களை சேர்ந்த 7 பேர், தலைமன்னார் பகுதியில் இருந்து பிளாஸ்டிக் படகு மூலமாக தப்பி, தனுஷ்கோடி அருகே நடுக்கடலில் உள்ள 1-வது மணல்திட்டு பகுதியில் வந்திறங்கி உள்ளனர். அவர்களை ஏற்றி வந்த படகோட்டிகள், மீண்டும் இலங்கை பகுதிக்கு சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.

1-வது மணல் திட்டில் அகதிகள் வந்திறங்கி இருப்பது குறித்து மீனவர்கள் மூலமாக நேற்று காலை கடலோர போலீசாருக்கு தகவல் தெரியவந்தது. எனவே, மீனவர்கள் உதவியுடன் மீன்பிடி படகில் அரிச்சல்முனை கரைக்கு 7 பேரையும் அழைத்து வந்தனர்.

4 சிறுவர்கள்

தொடர்ந்து விசாரணைக்காக அனைவரையும் கடலோர போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர். தனுஷ்கோடி வந்தவர்களில் 4 பேர் சிறுவர்-சிறுமியர் ஆவர். அகதிகளிடம் மத்திய-மாநில உளவு பிரிவு மற்றும் கியூ பிரிவு, கடலோர போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தினார்கள்.

அப்போது, இலங்கை வவுனியா மாவட்டத்தை சேர்ந்த தஸ்நோவிஸ் (வயது 40), இவருடைய மனைவி ரஜினி (39), இவர்களுடைய மகன் யோசுவா (12), மகள் ஏஞ்சல் (12), ஹன்சிகா (5 என்பதும், மற்ற 2 பேர் திரிகோணமலை மாவட்டத்தை சேர்ந்த ரதி (40), இவருடைய மகன் சாந்தனு (7) என்பதும் தெரியவந்தது.

விசாரணையில் ரதி கூறியதாவது:-

கடந்த 1990-ம் ஆண்டு இலங்கையில் இருந்து என்னுடைய பெற்றோர், அண்ணன், தங்கை ஆகியோருடன் அகதியாக வந்து திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு முகாமில் தங்கி இருந்தேன்.

2012-ம் ஆண்டு பாஸ்போர்ட் பெற்று விமானம் மூலம் இலங்கை சென்று, 2014-ல் எனக்கு திருமணம் நடந்தது. ஒரு ஆண் குழந்தை பிறந்தது. 2016-ம் ஆண்டு முதல் கணவரை விட்டு பிரிந்து வாழ்ந்து வருகிறேன். இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் அரிசி, சீனி, பிஸ்கட், பருப்பு, காய்கறி உள்ளிட்ட அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலையும் பல மடங்கு உயர்ந்து உள்ளதால் மகனுடன் வாழ முடியாத நிலை ஏற்பட்டது. எனவே கழுத்தில் அணிந்து இருந்த ஒரு பவுன் தங்க நகையை விற்று அதில் கிடைத்த பணத்தை படகோட்டியிடம் கொடுத்து படகு மூலம், நானும் என் மகனும் தனுஷ்கோடி வந்தோம். இதே போல் எங்களுடன் தஸ்நோவிஸ் குடும்பத்தினரும் வந்தனர் என்று தெரிவித்துள்ளார். பின்னர் 7 பேரும் மண்டபம் அகதிகள் முகாமில் ஒப்படைக்கப்பட்டனர்.


Next Story