கண்மாயை ஆக்கிரமித்த ஆகாயதாமரை


கண்மாயை ஆக்கிரமித்த ஆகாயதாமரை
x

ராஜபாளையத்தில் கண்மாயை ஆகாய தாமரைகள் ஆக்கிரமித்து வளர்ந்துள்ளதால் நிலத்தடி நீர் ஆதாரம் பாதிக்கும் நிலை உள்ளது.

விருதுநகர்

ராஜபாளையம்.

ராஜபாளையத்தில் கண்மாயை ஆகாய தாமரைகள் ஆக்கிரமித்து வளர்ந்துள்ளதால் நிலத்தடி நீர் ஆதாரம் பாதிக்கும் நிலை உள்ளது.

நிலத்தடி நீர் ஆதாரம்

ராஜபாளையம் பகுதியில் கடம்பன்குளம் கண்மாய், கருங்குளம் கண்மாய், பெரியாதி குளம் கண்மாய், புளியங்குளம் கண்மாய், வடுக ஊருணி, கொண்டநேரி கண்மாய் ஆகிய கண்மாய்கள் உள்ளன. இந்த கண்மாய்களின் அளவு தற்போது ஆக்கிரமிப்பால் படிப்படியாக குறைந்து வருகிறது.

முந்தைய காலத்தில் கண்மாயில் எப்போதும் தண்ணீர் நிறைந்து இருக்கும். ராஜபாளையம் பகுதி மக்களின் முக்கிய நீர் ஆதாரமாக இந்த கண்மாய் விளங்கியது. இந்த கண்மாய்களை நம்பி விவசாயிகள் நெல், வெண்டைக்காய், கேரட், தக்காளி, எலுமிச்சை, மா, பலா, வாழை, கரும்பு, சோளம் போன்ற பயிர்களை சாகுபடி செய்து வருகிறார்கள்.

நீர்வரத்து வழிகள்

மழைக்காலங்களில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்யும் மழையால் ஆற்றுப்பகுதி வழியாக இந்த கண்மாய்களில் மழைநீர் வந்து சேரும். தற்போது கண்மாய்களை பராமரிப்பு செய்யாமல் விட்டதால் கண்மாய் நீர்வரத்து வழிகள் அடைப்பட்டு மழைநீர் செல்ல வழியின்றி காணப்படுகிறது.

இந்த கண்மாய் நீர் வழித்தடத்தில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. இந்த கண்மாயில் நகரில் உள்ள சாக்கடை கழிவுநீர் மற்றும் சாயப்பட்டறை கழிவுகள் கலக்கின்றன. இதனால் விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

ஆக்கிரமிப்பு

ஆதலால் நாளுக்கு நாள் விவசாயம் செய்யும் பரப்பளவும் குறைந்து வருகிறது.

மேலும் கண்மாய் முழுவதும் ஆகாயத்தாமரைகள், கருவேல மரங்கள் ஆக்கிரமித்து வளர்ந்து புதர் மண்டி காணப்படுகிறது.

எனவே கண்மாய்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி சாக்கடை கழிவு, சாயக்கழிவு நீர் கன்மாயில் கலப்பதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story