வேளாண்மை இணையதளத்தில் விவரங்களை விவசாயிகள் பதிவு செய்ய வேண்டும்


வேளாண்மை இணையதளத்தில் விவரங்களை விவசாயிகள் பதிவு செய்ய வேண்டும்
x

வேளாண் அடுக்ககம் இணையதளத்தில் விவசாயிகள் விவரங்களை பதிவு செய்ய வேண்டும் என கலெக்டர் ஸ்ரேயாசிங் தெரிவித்து உள்ளார்.

நாமக்கல்

புதிய இணையதளம்

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

வேளாண் அடுக்ககம் (அக்ரி ஸ்டாக்) திட்டம் ஏப்ரல் மாதம் 1-ந் தேதி முதல் செயல்படுத்தப்பட உள்ளது. வேளாண் அடுக்ககம் உருவாக்குவதன் மூலம் நில விவரங்களுடன் இணைக்கப்பட்ட விவசாயிகள் விவரம், நில உடைமை வாரியாக புவியியல் குறியீடு செய்தல் மற்றும் நில உடைமை வாரியாக சாகுபடி பயிர் விவரம் ஆகிய அடிப்படை விவரங்களை கொண்டு கிரையன்ஸ் என்ற இணையதளம் உருவாக்கப்பட உள்ளது.

அந்த இணையதளத்தில் விவசாயிகள் பயனடையும் வகையில் பேரிடர் மேலாண்மைத்துறை, வேளாண்மை-உழவர் நலத்துறை, தோட்டக்கலைத்துறை, கூட்டுறவுத்துறை, பட்டு வளர்ச்சித்துறை, உணவு வழங்கல் துறை, வேளாண் பொறியியல் துறை, கால்நடை பராமரிப்புத்துறை, வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை, விதை சான்றளிப்புத்துறை, வருவாய்த்துறை ஆகிய துறைகள் இணைக்கப்பட உள்ளது.

இதன் மூலம் அரசின் நலத்திட்டங்கள் சரியான பயனாளிக்கு சென்றடைவதை உறுதிப்படுத்த முடியும். ஒற்றை சாளர வலைதளமாக செயல்படுவதால் விவசாயிகள் ஒரே இடத்தில் பதிவு செய்து அரசின் உதவிகளை பெற்றுக் கொள்ளலாம். ஒவ்வொரு முறையும் பயன்பெற விவசாயிகள் விண்ணப்பிக்கும் போது ஆவணங்கள் சமர்ப்பிக்க வேண்டியதில்லை. விவசாயிகள் இதுவரை அரசிடமிருந்து பெற்ற நன்மைகளை தெரிந்து கொள்ளலாம். விவசாயிகள் நேரடியாக வலைதளத்தில் பதிவு செய்வதால் முன்னுரிமை அடிப்படையில் அரசின் பயன்களை பெற்றுக் கொள்ளலாம்.

நேரடி பண பரிமாற்றம்

வேளாண்மை சார்ந்த அனைத்து துறைகளும் விவசாயிகளின்அடிப்படை விவரங்கள் மற்றும் பயிர் விவரங்களை தெரிந்து கொண்டு அதற்கேற்ப பயன்களை அளிக்க முடியும். திட்ட நிதி பலன்கள் ஆதார் எண் அடிப்படையில் வங்கி கணக்கிற்கு நேரடி பண பரிமாற்றம் மூலம் அனுப்பப்படும்.

எனவே நாமக்கல் மாவட்டத்திலுள்ள அனைத்து விவசாயிகளும் தங்களது ஆதார் அட்டை நகல், புகைப்படம், வங்கி கணக்கு புத்தக நகல், நில பட்டா ஆவண நகல் ஆகியவற்றை சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர், உதவி வேளாண்மை அலுவலர், உதவி தோட்டக்கலை அலுவலரிடம் உடனடியாக ஒப்படைத்து கிரையன்ஸ் இணையதளத்தில் தங்களின் அடிப்படை விவரங்கள் பதிவு செய்யப்பட்டதை உறுதி செய்து, அரசின் நலத்திட்ட உதவிகளை பெற்று பயன் அடையலாம்.

இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

1 More update

Next Story