கும்பாபிஷேகத்தை முன்னிட்டு: புகழிமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு புனிதநீர் எடுத்து கொண்டு பக்தர்கள் ஊர்வலம்

கும்பாபிஷேகத்தை முன்னிட்டு புகழிமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு புனிதநீர் எடுத்து கொண்டு பக்தர்கள் ஊர்வலமாக சென்றனர்
பாலசுப்பிரமணிய சுவாமி கோவில்
கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையத்தில் வரலாற்று சிறப்புடைய புகழிமலையில் பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. இக்கோவில் நவீன சிற்ப சாஸ்திரமுறைப்படி புனரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்டு கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
அதன்படி கும்பாபிஷேக விழா நேற்று முன்தினம் இரவு கிராமசாந்தியுடன் தொடங்கியது. தொடர்ந்து நேற்று காலை புகழிமலை அடிவாரத்தில் உள்ள பாதவிநாயகர் கோவிலில் விநாயகர் வழிபாடு, மகாகணபதி யாகம், தீபாராதனை ஆகியவை நடந்தது.
பக்தர்கள் ஊர்வலம்
பின்னர் வேலாயுதம்பாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் சுமார் 3000 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் தவுட்டுப்பாளையம் காவிரி ஆற்றுக்கு சென்று புனித நீராடினர். பின்னர் தீர்த்தக் குடங்களுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் அலங்கரிக்கப்பட்ட யானை, குதிரை, காளை, ஒட்டகம் ஆகியவை முன்னே செல்ல பக்தர்கள் குடங்களில் புனிதநீரை எடுத்துகொண்டு ஊர்வலமாக புகழிமலைக்கு வந்தனர்.
சிறப்பு அபிஷேகம்
பின்னர் புகழிமலை அடிவாரத்தில் பாலசுப்பிரமணியசுவாமி மற்றும் உச்சிஷ்ட மகா கணபதி, மீனாட்சி அம்பிகை உடனுறை சோமசுந்தரேஷ்வரர், விஷ்ணு, துர்க்கை, தட்சிணாமுர்த்தி, சிவகாமசுந்தரி உடனுறை நடராஜர், நவக்கிரகங்கள், இடும்பன், மலைக்காவலன், கன்னிமார், பாதவிநாயகர் ஆகிய உற்சவ சுவாமிகளுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம், விபூதி, தேன், கரும்புச்சாறு உள்ளிட்ட 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மாலை வாஸ்துசாந்தி பூஜை, பூமிதேவி வழிபாடு ஆகியவை நடந்தது.
இன்று (சனிக்கிழமை) காலை விநாயகர் வழிபாடு, புனிததீர்த்தங்கள் வழிபாடு, திருமுறை பாராயணம், புண்யாகம், கும்ப அலங்காரம், யாத்ரா தானம், அருள் சக்தி கலசங்கள் யாகசாலைக்கு எழுந்தருளல், முதல் கால யாக பூஜை நடைபெறுகிறது.
கும்பாபிஷேகம்
நாளை (ஞாயிற்றுக்கிழமை) 2-ம் கால யாக பூஜை, விசேஷ திரவிய ஹோமங்கள், அனைத்து கோபுரங்களுக்கும் கண் திறப்பு மற்றும் கலசங்கள் வைத்தல், மூலஸ்தானம் மற்றும் அனைத்து பரிவார தெய்வங்களுக்கும் எண்வகை அஷ்டபந்தன மருந்து சாத்துதல், 3-ம் கால யாக பூஜை ஆகியவை நடைபெறுகிறது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நாளைமறுநாள் (திங்கள்கிழமை) 4-ம் கால யாகபூஜை, மங்கள பூர்ணாகுதி, ஆறுமுகனின் அருள் சக்தி கலசங்கள் புறப்படுதல் நடக்கிறது. அதனை தொடர்ந்து காலை 9 மணிக்கு மேல் 10.15 மணிக்குள் பாலசுப்பிரமணியசுவாமி மற்றும் திருச்சுற்று தெய்வங்களுக்கும் அவர்களின் விமானங்களுக்கும் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
இதற்கான ஏற்பாடுகளை கோவில் திருப்பணிக்கு தலைவரும், புகழூர் நகராட்சி தலைவமான சேகர் என்கிற குணசேகரன் தலைமையில் திருப்பணிக்குழுவினர் செய்து வருகின்றனர்.






