கோவில் பூட்டை உடைத்து ஐம்பொன் சிலைகள் திருட்டு


கோவில் பூட்டை உடைத்து ஐம்பொன் சிலைகள் திருட்டு
x

நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரம் அருகே கோவில் பூட்டை உடைத்து ஐம்பொன் சிலைகள் திருட்டு போனது. மர்ம நபர்களை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.

நாமக்கல்

எலச்சிபாளையம்

ஐம்பொன் சிலை திருட்டு

நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரம் ஒன்றியம் வையப்பமலை அருகே சித்த மூப்பன் பாளையத்தில் ஓங்காளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் அதே பகுதியை சேர்ந்த வடிவேல் (வயது 32) என்பவர் பூசாரியாக உள்ளார். இந்தநிலையில் நேற்று முன்தினம் வழக்கம்போல் பூஜையை முடித்துவிட்டு மாலையில் பூசாரி வடிவேல் கோவில் நடையை அடைத்துவிட்டு வீட்டிற்கு சென்றிருக்கிறார். பின்னர் காலையில் பூசாரி வடிவேல் கோவிலை திறக்க வந்தபோது கோவிலின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து உள்ளே சென்று பார்த்தபோது கோவிலில் உள்ள 40 கிலோ எடை கொண்ட ஐம்பொன் சிலை, 15 கிலோ எடை உள்ள வெண்கல மணிகள் உள்பட பூஜை பொருட்கள் திருட்டு போயிருப்பது தெரியவந்தது.

போலீசார் விசாரணை

இதுகுறித்து பூசாரி வடிவேல் கோவில் தர்மகர்த்தா பெரியசாமிக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து எலச்சிபாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் நாமக்கல் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சந்திரமவுலி, திருச்செங்கோடு துணை போலீஸ் சூப்பிரண்டு மகாலட்சுமி, எலச்சிபாளையம் இன்ஸ்பெக்டர் குலசேகரன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து நேரில் விசாரணை செய்தனர். மேலும் நாமக்கல்லில் இருந்து தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கைரேகை சேகரிக்கப்பட்டது. மேலும் போலீஸ் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது.

இதையடுத்து ஐம்பொன் சிலைகள் கொள்ளையடித்த மர்ம நபர்கள் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி உள்ளார்களா? என்பது குறித்து எலச்சிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலை வீசி தேடி வருகின்றனர்.

மல்லசமுத்திரம் அருகே கோவில் பூட்டை உடைத்து ஐம்பொன் சிலைகள் திருட்டு போன சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story