ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்கத்தினர் மறியல்; 249 பேர் கைது


ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்கத்தினர் மறியல்; 249 பேர் கைது
x
தினத்தந்தி 24 Jan 2023 6:45 PM GMT (Updated: 24 Jan 2023 7:04 PM GMT)

நெல்லை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சாலை மறியலில் ஈடுபட்ட ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்கத்தினர் 249 பேரை போலீசார் கைது ெசய்தனர்.

திருநெல்வேலி

மத்திய அரசின் தொழில் கொள்கைகளை எதிர்த்தும், 4 சட்ட தொகுப்பை கைவிட வேண்டும். தொழிலாளர்கள் 240 நாட்கள் பணி புரிந்தால் பணியை நிரந்தரம் செய்ய வேண்டும். எந்த பணி புரிந்தாலும் ரூ.21 ஆயிரத்திற்கு குறையாமல் மாத சம்பளம் வழங்க வேண்டும். நல வாரியங்களில் பதிவு செய்த உறுப்பினர்களுக்கு ரூ.6 ஆயிரம் குறையாமல் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்கம் சார்பில் நேற்று நெல்லை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சாலை மறியல் போராட்டம் நடந்தது.

நெல்லை வண்ணார்பேட்டையில் நடந்த சாலை மறியல் போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் சடையப்பன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் லட்சுமணன் முன்னிலை வகித்தார். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதில் ஈடுபட்ட 101 பேரை போலீசார் கைது செய்தனர்.

இதேபோல் அம்பை பூக்கடை பஜாரில் நடந்த போராட்டத்திற்கு தொழிற்சங்க மாவட்ட செயலாளர் முருகன் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் ராமகிருஷ்ணன், கல்யாணசுந்தரம், கண்ணன், வடிவேல், சபியாள், தர்மலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மறியலில் ஈடுபட்ட 36 பெண்கள் உள்பட 100 பேரை அம்பை போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரமோகன் தலைமையிலான போலீசார் கைது செய்தனர்.

வள்ளியூரில் நடந்த மறியல் போராட்டத்தில் தொழிற்சங்க நிர்வாகிகள் எம்.எஸ்.மணியன், முருகன், சேதுராமலிங்கம், கலைமுருகன், பாலன், லெனின் முருகானந்தம் உள்பட பலர் கலந்து கொண்டனர். மறியலில் ஈடுபட்ட 48 பேரை போலீசார் கைது செய்தனர்.


Next Story