அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு - வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு அழைப்பு


அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு - வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு அழைப்பு
x

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழாவில் பங்கேற்க வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அலங்காநல்லூர்,

பொங்கல் பண்டிகையை யொட்டி மதுரை அலங்காநல்லூரை அடுத்த குறவன்குளம் கிராமத்தில் சுற்றுலாத்துறை சார்பில் வருகிற 15-ந் தேதி கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது. இதில் உள்நாடு மட்டுமின்றி வெளிநாடு சுற்றுலா பயணிகளும் கலந்து கொள்ளும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்காக அவர்கள் மதுரை சுற்றுலா அலுவலகத்தில் இருந்து 15-ந் தேதி காலை தனி பஸ் மூலம் அழைத்துச் செல்லப்படுவார்கள்.

குறவன்குளம் கிராமத்தில் சுற்றுலா பயணிகளுக்கு தமிழக பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளிக்கப்படுகிறது. அதன் பிறகு கிராம மக்களுடன் இணைந்து சுற்றுலா பயணி கள் பொங்கல் வைக்கும் முறையை நேரடியாக கண்டு மகிழலாம். இதனைத்தொடர்ந்து பரதம், கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடக்கின்றன.

அலங்காநல்லூரில் 17-ந் தேதி நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிக்கும் சுற்றுலாப் பயணிகள் பஸ் மூலம் அழைத்துச் செல்லப்படுவார்கள். அங்கு அவர்கள் பார்வையாளர் மாடத்தில் அமர்ந்து ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை கண்டுகளிக்கலாம். மதுரை மாவட்ட சுற்றுலா துறை சார்பில் 15, 17-ந் தேதிகளில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்க விரும்பும் வெளி நாட்டு சுற்றுலா பயணிகள் பாஸ்போர்ட் உள்ளிட்ட விவரங்களுடன் மதுரை மேலவெளி வீதியில் உள்ள மாவட்ட சுற்றுலா அலுவலகத்தில் முன்பதிவு செய்ய வேண்டும்.

மேற்கண்ட தகவலை மதுரை மாவட்ட கலெக்டர் அனீஷ்சேகர் தெரிவித்துள்ளார்.


Next Story