அனைத்து வளர்ச்சிப்பணிகளையும் அடுத்த மாத இறுதிக்குள் முடிக்க வேண்டும்


அனைத்து வளர்ச்சிப்பணிகளையும் அடுத்த மாத இறுதிக்குள் முடிக்க வேண்டும்
x
தினத்தந்தி 22 Feb 2023 6:45 PM GMT (Updated: 22 Feb 2023 6:46 PM GMT)

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடைபெற்று வரும் அனைத்து வளர்ச்சி திட்டப்பணிகளையும் அடுத்த மாத இறுதிக்குள் முடிக்க வேண்டும் என மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஹர்சகாய் மீனா அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி

ஆலோசனை கூட்டம்

கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் வளர்ச்சி பணிகள் முன்னேற்றம் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ்(பயிற்சி) அரசு முதன்மை செயலாளருமான ஹர்சகாய் மீனா தலைமையில் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித்திட்டம், அண்ணா மறுமலர்ச்சி திட்டம், ஊரக வளர்ச்சி துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டுவரும் ஜல்ஜீவன் மிஷன், பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டம் மற்றும் பள்ளிக் கல்வி துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டுவரும் இல்லம் தேடி கல்வி திட்டம், எண்ணும் எழுத்தும் திட்டம், சிறப்பு திட்டங்களான முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம், நான் முதல்வன் திட்டம், மக்களை தேடி மருத்துவம் ஆகிய திட்டங்கள் குறித்தும், பொதுப்பணித் துறை, சமூகநலத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுதுறை, நகராட்சித்துறை மற்றும் இதர துறைகளில் மேற்கொள்ளப்பட்டுவரும் பணிகளின் முன்னேற்றம் மற்றும் நலத்திட்டங்கள் வழங்கிய விவரம் குறித்து கண்காணிப்பு அலுவலர் ஹர் சகாய் மீனா அனைத்துத்துறை அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

மார்ச் 31-ந் தேதிக்குள்...

தொடர்ந்து அவர் அனைத்து துறைகள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித்திட்ட பணிகள், நலத்திட்ட உதவிகள் அனைத்தும் அடுத்த மாதம்(மார்ச்) 31-ந் தேதிக்குள் 100 சதவிதம் முடித்து நடப்பாண்டில் வழங்கப்பட்ட தொகையை முழுவதுமாக பொதுமக்கள் பயன்பாட்டிற்கு செலவு செய்திட வேண்டும் என அனைத்துத் துறை அலுவலர்களுக்கும் உத்தரவிட்டார்.

இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சத்தியநாராயணன், வன அலுவலர் சுமேஷ் சோமன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மணி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சுரேஷ், வேளாண்மை இணை இயக்குனர் கருணாநிதி, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு விஜய் கார்த்திக்ராஜா, கோட்டாட்சியர்கள் யோகஜோதி, பவித்ரா, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் முனிஸ்வரன், தமிழ்நாடு ஊரக வாழ்வாதார திட்ட இயக்குனர் சுந்தர்ராஜன், துணை இயக்குனர் சுகாதாரப்பணிகள் ராஜா, தோட்டக்கலை துணை இயக்குனர் அன்பழகன், உதவி ஆணையர்(கலால்) ராஜவேல், கள்ளக்குறிச்சி நகராட்சி ஆணையாளர் குமரன், வனவிரிவாக்க அலுவலர் உமாசங்கர் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.


Next Story