தமிழகம் முழுவதும் பக்ரீத் பண்டிகை கோலாகலம்; சிறப்பு தொழுகை நடத்தி அன்பை பரிமாறிக்கொண்ட இஸ்லாமியர்கள்


தமிழகம் முழுவதும் பக்ரீத் பண்டிகை கோலாகலம்; சிறப்பு தொழுகை நடத்தி அன்பை பரிமாறிக்கொண்ட இஸ்லாமியர்கள்
x
தினத்தந்தி 29 Jun 2023 6:09 AM GMT (Updated: 29 Jun 2023 6:42 AM GMT)

தமிழகம் முழுவதும் உள்ள மசூதிகளில் இஸ்லாமியர்கள் அதிகாலையில் சிறப்பு தொழுகை நடத்தினர்.

சென்னை,

முஸ்லிம்களின் முக்கிய புனித பண்டிகைகளில் ஒன்றாக உள்ள பக்ரீத் பண்டிகை உலகம் முழுவதும் இன்று (வியாழக்கிழமை) கொண்டாடப்படுகிறது. தியாகத்திருநாளாக முஸ்லிம்கள் இந்த பண்டிகையை கொண்டாடுகிறார்கள்.

இந்த நாளில் முஸ்லிம்கள் இப்ராகிம் நபி, இஸ்மாயில் நபி ஆகியோரின் தியாகத்தை போற்றும் வகையிலும், பலிக்கு ஈடாக இறைவன் ஒரு ஆட்டை பலியிட கொடுத்ததையும் நினைவு கூர்ந்து தொழுகை நிறைவேற்றுகிறார்கள்.

பக்ரீத் பண்டிகை இன்று கொண்டாடப்படும் நிலையில், தமிழகம் உட்பட நாடு முழுவதும் உள்ள மசூதிகளில் அதிகாலையில் சிறப்பு தொழுகைகளில் இஸ்லாமிய மக்கள் ஈடுபட்டனர்.

தமிழகம் முழுவதும் திறந்தவெளி மைதானங்கள் மற்றும் மசூதிகளில் சிறப்பு தொழுகைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஒவ்வொரு மைதானங்களில் நடந்த தொழுகையிலும் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். அனைத்து மக்களும் அமைதியோடு வாழ வேண்டும். நாட்டில் அமைதி நிலவ வேண்டும் என்று இஸ்லாமியர்கள் பிரார்த்தனை செய்தனர்.

சென்னையிலும் இன்று பக்ரீத் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது. காலையிலேயே இஸ்லாமியர்கள் புத்தாடை அணிந்து சிறப்பு தொழுகையில் ஈடுபட்டு ஒருவருக்கொருவர் வாழ்த்து தெரிவித்து மகிழ்ந்தனர். இதல் சிறுவர்களும் ஏராளமானோர் பங்கேற்றனர். தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் சென்னை பிராட்வேயில் உள்ள டான்பாஸ்கோ பள்ளியில் இன்று காலையில் பக்ரீத் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் மனித நேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாகிருல்லா எம்.எல்.ஏ. மற்றும் 1000-க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் பங்கேற்றனர். தொழுகை முடிந்த பிறகு அவர்கள் ஒருவருக்கொருவர் கட்டித் தழுவி வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.

திருவல்லிக்கேணி பெரிய மசூதியில் இன்று காலையில் பக்ரீத் பண்டிகையையொட்டி சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் 1000-க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு தொழுகையில் ஈடுபட்டனர். பின்னர் ஒருவருக்கொருவர் வாழ்த்து தெரிவித்தனர்.

இதேபோல் சென்னை பெரம்பூர், ஓட்டேரி, ராயபுரம், புரசைவாக்கம், அண்ணாநகர், ஐஸ் அவுஸ், வண்ணாரப்பேட்டை, தண்டையார் பேட்டை, கொடுங்கையூர் உள்ளிட்ட சென்னை முழுவதும் உள்ள மசூதிகளில் நடந்த சிறப்பு தொழுகையில் ஏராளமான இஸ்லாமியர்கள் பங்கேற்றனர்.

நெல்லை மாவட்டத்தில் இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கு பகுதியான மேலப்பாளையத்தில் அதிகாலை முதலே இஸ்லாமியர்கள் புத்தாடைகள் உடுத்தி தொழுகையில் ஈடுபட்டனர்.

அதேபோல திருச்சி மாவட்டம் தென்னூர் அண்ணா உழவர் சந்தையில் பக்ரீத் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் கலந்துகொண்டு சிறப்பு தொழுகை நடத்தினர்.

புதுச்சேரியில் பக்ரீத் பண்டிகை விமரிசையாக கொண்டாடப்பட்டது. புதுச்சேரி கடற்கரை சாலை, பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. நாட்டு மக்கள் நலமுடம் வாழ சிறப்பு பிரார்த்தனை செய்யப்பட்டது. தொழுகை முடிந்ததும், ஒருவருக்கொருவர் ஆரத்தழுவி தங்களது அன்பை பரிமாறிக்கொண்டனர்.


Next Story