தேனி மாவட்டம் முழுவதும் வீடுகள், வணிக நிறுவனங்களில் தேசியகொடி ஏற்றி மரியாதை


தேனி மாவட்டம் முழுவதும்  வீடுகள், வணிக நிறுவனங்களில் தேசியகொடி ஏற்றி மரியாதை
x

தேனி மாவட்டம் முழுவதும் வீடுகள், வணிக நிறுவனங்களில் தேசியகொடி ஏற்றி மரியாதை செலுத்தப்பட்டது.

தேனி

தேசியகொடி

நாடு முழுவதும் 75-வது சுதந்திர திருநாள் அமுத பெருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. நாளை மறுநாள் (திங்கட்கிழமை) சுதந்திர தினம் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி நாடு முழுவதும் வீடுகள், வணிக நிறுவனங்கள், அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் உள்பட அனைத்து இடங்களிலும் 3 நாட்கள் தேசியகொடி ஏற்றி மரியாதை செலுத்த வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியது.

அதன்படி, நாடு முழுவதும் இன்று வீடுகள், வணிக நிறுவனங்கள், அலுவலகங்களில் தேசியகொடி ஏற்றப்பட்டது. தேனி மாவட்டத்திலும் நகர்ப்புற மற்றும் கிராமப்புற பகுதிகளில் உள்ள அரசு அலுவலகங்கள், தனியார் அலுவலகங்கள், வணிக நிறுவனங்கள் உள்ளிட்ட பகுதிகளிலும், பொதுமக்கள் பலர் தங்களின் வீடுகளிலும் தேசியகொடி ஏற்றி மரியாதை செலுத்தினர்.

கம்பீர காட்சி

தேனி மாவட்ட கலெக்டரின் முகாம் அலுவலகத்தில் கலெக்டர் முரளிதரன் தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார். தேனி நகரில் பெரிய வணிக நிறுவனங்கள் தங்களின் நிறுவனங்களின் முன்பும், மொட்டை மாடிப் பகுதியிலும் தேசியகொடியை பறக்கவிட்டனர். சிறு வணிக நிறுவனங்கள் மற்றும் தள்ளுவண்டி கடைகளிலும் தேசியகொடி பறக்கவிடப்பட்டது. பொதுமக்கள் பலர் தங்களின் வீடுகளில் தேசிய கொடி கட்டி மரியாதை செலுத்தினர்.

தேனி கர்னல் ஜான் பென்னிகுயிக் பஸ் நிலையத்தின் மேல்தளத்தில் ஏராளமான தேசியகொடிகள் கட்டி பறக்கவிடப்பட்டன. மேலும் அங்குள்ள கடைகள், ஓட்டல்களிலும் தேசியகொடிகள் கட்டப்பட்டு இருந்தன. அதுபோல், ஏராளமான ஆட்டோக்களும் தேசியகொடி கட்டிய நிலையில் உலா வந்தன. இதனால், தேனியில் காணும் இடங்கள் எங்கும் தேசியகொடிகள் கம்பீரமாக காட்சி அளித்தன.


Next Story