வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண் இணைப்பு பற்றி ஆலோசிக்க 1-ந் தேதி அனைத்து கட்சி கூட்டம்


வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண் இணைப்பு பற்றி ஆலோசிக்க 1-ந் தேதி அனைத்து கட்சி கூட்டம்
x

வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைப்பது பற்றி ஆலோசிக்க வருகிற 1-ந் தேதி அனைத்து கட்சி கூட்டம் கூட்டப்பட உள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு கூறினார்.

சென்னை,

இந்தியா முழுவதும் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணிகள், ஆகஸ்டு 1-ந் தேதியன்று தொடங்கவுள்ளன. இந்த பணிகளை 2023-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் முடிக்க இந்திய தேர்தல் கமிஷன் திட்டமிட்டுள்ளது. வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைப்பது மிகப்பெரிய பணியாகும். இந்த பணிக்கு அரசியல் கட்சிகளின் முழு ஒத்துழைப்பு அவசியமாகும்.

எனவே தமிழகத்தில் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணிகள் தொடர்பாக, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை நடத்தவுள்ளோம். தலைமை செயலகத்தில் ஆகஸ்டு 1-ந் தேதி காலை 11 மணிக்கு நடைபெறவுள்ள இந்த கூட்டத்தில், வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைப்பது உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளன.

புதிய நடைமுறை

வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியை வெற்றிகரமாக நடத்த கட்சிகளின் ஆலோசனைகள் பெறப்படும். மற்றொரு முக்கிய அம்சமாக, வாக்காளர் பட்டியல் சுருக்க முறை திருத்தப்பணிகள் குறித்து விவாதிக்கப்படும். இந்த பணிகள் அக்டோபர் 1-ந் தேதி தொடங்கப்பட உள்ளன. தற்போது வாக்காளர் பட்டியலில் பெயர்களைச் சேர்க்க புதிய நடைமுறையை தேர்தல் கமிஷன் வகுத்துள்ளது.

அதாவது, தற்போதுள்ள நிலவரப்படி, 18 வயது பூர்த்தியான பிறகே வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க முடியும். இந்த பெயர் சேர்ப்பு பணி, ஜனவரி 1-ந் தேதியை மையப்படுத்தி மேற்கொள்ளப்படுகிறது. ஜனவரி 1-ந் தேதிக்குள் யாருக்கெல்லாம் 18 வயது பூர்த்தி ஆகிறதோ அவர்களே வாக்காளர் பட்டியலில் தங்களின் பெயர்களைச் சேர்க்கலாம்.

ஒவ்வொரு காலாண்டிலும்...

ஆனால், ஜனவரி 2-ந் தேதியன்று ஒருவருக்கு 18 வயது பூர்த்தியாகிவிட்டால், அவர் அடுத்ததாக நடைபெறக்கூடிய சுருக்க முறை திருத்த பணிகளின் போதுதான் பட்டியலில் பெயரைச் சேர்க்க விண்ணப்பிக்க முடியும். ஒருநாள் பின்தங்கி இருப்பதால், ஓராண்டு வரை காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. இதைத் தவிர்க்க, ஒரு ஆண்டின் ஒவ்வொரு காலாண்டிலும் (மூன்று மாதங்கள் இடைவெளியில்) வாக்காளர் பட்டியல் பெயர் சேர்ப்பு நடவடிக்கையை மேற்கொள்ள தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.

அதாவது, ஜனவரி 1-ந் தேதி, ஏப்ரல்-1, ஜூலை-1, அக்டோபர்-1 ஆகிய நாட்களுக்குள் 18 வயது பூர்த்தி ஆகிவிட்டாலும் வாக்காளர் பட்டியலில் அவர்களின் பெயரை ஒவ்வொரு காலாண்டிலும் சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக தேர்தல் விதிமுறைகளில் திருத்தம் கொண்டு வரப்படுகிறது. இந்த புதிய நடைமுறை பற்றியும் அரசியல் கட்சிகளின் கூட்டத்தில் ஆலோசிக்கப்படும்.

அக்டோபர் மாதத்தில் காந்தி ஜெயந்தி கொண்டாட்டத்தின்போது, தமிழ்நாடு முழுவதும் கிராம சபை கூட்டங்கள் நடத்தப்படும். இந்த மாதத்தில்தான் வாக்காளர் பட்டியல் சுருக்க முறைத் திருத்த பணிகளும் நடைபெறவுள்ளது. எனவே, கிராம சபை கூட்டத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பான பணிகளும், ஆலோசனைகளும் மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அ.தி.மு.க. சார்பில் யார் வருவார்?

வருகிற 1-ந் தேதி நடைபெறும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கான கூட்டத்தில் அ.தி.மு.க. கட்சி சார்பில் யாருக்கு அழைப்பிதழ் அனுப்பப்படும் என்று தலைமை தேர்தல் அதிகாரியின் அலுவலகத்தில் கேட்டபோது அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

அங்கீரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடனான கூட்டத்தை நடத்துவதற்கு முன்பதாக கூட்டம் குறித்த முன்னறிவிப்பு கடிதத்தை அந்தந்த கட்சியின் அலுவலகத்துக்கு அனுப்புவது வழக்கம். அதுபோலவே அ.தி.மு.க.வின் தற்போதைய தலைமை அலுவலகத்துக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அந்த கடிதத்தை ஏற்று யார் வருகிறார்களோ, அவர்கள் கூட்டத்தில் பங்கேற்கலாம். ஒவ்வொரு கூட்டத்துக்கும் தேர்தல் கமிஷன் சார்பில் எப்படி கடிதம் அனுப்பி வைக்கப்படுமோ, அதுபோன்றே இப்போதும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தார்.


Next Story