கட்டுமான தொழிலாளர்களுக்கு நிலுவையில் உள்ள திட்டங்கள் அனைத்தும் விரைவில் நிறைவேற்றப்படும்: அமைச்சர் கணேசன் பேச்சு


கட்டுமான தொழிலாளர்களுக்கு நிலுவையில் உள்ள திட்டங்கள் அனைத்தும் விரைவில் நிறைவேற்றப்படும்: அமைச்சர் கணேசன் பேச்சு
x

கட்டுமான தொழிலாளர்களுக்கு நிலுவையில் உள்ள திட்டங்கள் அனைத்தும் விரைவில் நிறைவேற்றப்படும் என அமைச்சர் கணேசன் தெரிவித்தார்.

கரூர்

நலத்திட்ட உதவிகள்

கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை, தமிழ்நாடு கட்டுமானம் மற்றும் அமைப்புச்சாரா தொழிலாளர் நல வாரியம் சார்பில் பதிவு பெற்ற கட்டுமான தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதற்கு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் கணேசன், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி மற்றும் தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நலவாரிய தலைவர் பொன்குமார் ஆகியோர் கலந்து கொண்டு பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.இந்நிகழ்ச்சிக்கு கலெக்டர் பிரபுசங்கர் தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் முன்னிலை வகித்தனர்.

அனைத்து திட்டங்கள்

இவ்விழாவில் அமைச்சர் கணேசன் கூறியதாவது:- கடந்த 10 ஆண்டு காலத்தில் தொழிலாளர்களுக்கு சேர வேண்டிய நலத்திட்டங்கள் அதிகளவு நிலுவையில் இருந்தது. தொடர்ந்து அதிகாரிகளுடன் ஆய்வு செய்தபோது ஏறக்குறைய 4 லட்சம் பேருக்கு கொடுக்க வேண்டிய நிலுவைத்தொகை இருந்தது. முதல்-அமைச்சர் ஒரே நாளில் 50 ஆயிரம் கட்டுமான தொழிலாளர்களுக்கு உதவித்தொகைகளை வழங்கினார். அதுமட்டுமல்லாமல் 24 மணி நேரத்தில் அவர்களது வங்கிக் கணக்கில் சேர வேண்டும் என்ற வழிவகையை செய்தார். 2- வது முறையாக ஆய்வு செய்து 57 ஆயிரம் பேருக்கு தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் வழங்கினார். இன்று வரை ஏறக்குறைய ரூ.420 கோடி அளவிற்கு 4 லட்சத்திற்கும் மேற்பட்ட கட்டுமான தொழிலாளர்களுக்கு கிடைக்க வேண்டிய அனைத்து நலத்திட்டங்களும் கொடுக்கப்பட்டுள்ளது. வருகிற 30-ந்தேதிக்குள் கரூர் மாவட்டத்தில் இருக்கக்கூடிய அனைத்து நிலுவைத் தொகைகளையும் வழங்குவதற்கான அனைத்து நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

மகப்பேறு உதவித்தொகை

கட்டுமான தொழிலாளர்களுக்கு 10 ஆயிரம் வீடுகளை கட்டுவதற்கு ரூ.400 கோடி ஒதுக்கி, இந்தாண்டு கட்டப்பட இருக்கின்றன. ஒரு வீட்டின் மதிப்பு ரூ.4 லட்சம், மகளிர் ஆட்டோவிற்கு மானியம் ரூ.1 லட்சம் என 500 பேருக்கு இந்தாண்டு வழங்கப்பட்டுள்ளது.முதல் திருமணத்திற்கு தற்போது ரூ.20 ஆயிரம் வழங்குகிறோம். மகப்பேறு உதவித்தொகை ரூ.18 ஆயிரம், கல்வி உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு உதவித்தொகைகள் நிறைவேற்றப்பட்டுள்ளது. இன்னும் நிலுவையில் உள்ள திட்டங்கள் அனைத்து விரைவில் நிறைவேற்றப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story