கொள்ளிடம் ஆற்றில் அடித்து செல்லப்பட்ட 6 பேரும் சடலமாக மீட்பு..!


கொள்ளிடம் ஆற்றில் அடித்து செல்லப்பட்ட 6 பேரும் சடலமாக மீட்பு..!
x

கொள்ளிடம் ஆற்றில் மூழ்கிய 5 பேர் சடலமாக மீட்கப்பட்ட நிலையில் 6 வது நபரின் சடலமும் மீட்கப்பட்டுள்ளது.

தஞ்சை:

தூத்துக்குடி மாவட்டம் சிலுவைப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சார்லஸ் (வயது 58). இவர் அதே கிராமத்தை சேர்ந்த பிரதீவ் ராஜ் (36), பிரவீன் ராஜ் (19), தாவீது (30), ஈசாக் (39), தெர்மஸ் (19) உள்பட 10-க்கும் மேற்பட்டோர் தஞ்சை மாவட்டம் பூண்டி மாதா பேராலயத்தில் பிரார்த்தனை செய்வதற்காக நேற்று முன்தினம் மாலை வந்தனர்.

பின்னர், மாதாவை தரிசனம் செய்த அவர்கள் இரவில் அங்கேயே தங்கினர். இந்த நிலையில் நேற்று காலை சார்லஸ், பிரதீவ்ராஜ், பிரவீன்ராஜ் உள்பட 6 பேர் மாதா கோவில் அருகே உள்ள கொள்ளிடம் ஆற்றில் இறங்கி குளித்தனர். திடீரென தண்ணீரின் வேகம் அதிகரித்ததால் அவர்கள் 6 பேரும் ஆற்றில் தத்தளித்து பின்னர் சிறிது நேரத்தில் அடித்து செல்லப்பட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த திருக்காட்டுபள்ளி தீயணைப்பு துறையினர், போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். இதையடுத்து தீயணைப்பு துறையினர் ஆற்றில் குதித்து 6 பேரையும் தேடினர்.

இதில் சார்லஸ், பிரதீவ்ராஜ், பிரவீன் ராஜ் மற்றும் தாவீது ஆகிய 4 பேரை சடலமாக மீட்டனர். இந்நிலையில் இன்று காலை தெர்மஸ் என்பவரை சடலமாக மீட்கப்பட்டார். 5 பேர் மீட்கப்பட்ட நிலையில் தற்போது ஈசாக் என்பவரும் சடலமாக மீட்கப்பட்டார். மீட்கப்பட்ட 6 பேரின் உடலும் திருவையாறு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.


Next Story