குற்றச்சாட்டு என்பது அரசியலில் இருந்து கொண்டு தான் இருக்கும் - சி.பி.ராதாகிருஷ்ணன் பேட்டி


குற்றச்சாட்டு என்பது அரசியலில் இருந்து கொண்டு தான் இருக்கும் - சி.பி.ராதாகிருஷ்ணன் பேட்டி
x

குற்றச்சாட்டு என்பது அரசியலில் இருந்து கொண்டு தான் இருக்கும் என்று பா.ஜ.க முன்னாள் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் கூறினார்.

கோவை,

ஜார்க்கண்ட் மாநில கவர்னராக நியமனம் செய்யப்பட்டுள்ள பா.ஜ.க முன்னாள் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

கவர்னர் பதவி எனக்கு கிடைத்துள்ளதை மகத்தான ஒரு மரியாதையாகவும், தமிழினத்திற்கு கிடைத்த பெருமையாகவும் பார்க்கிறேன். நாம் என்ன தான் தொடர்ந்து அரசியலில் உழைத்து கொண்டிருந்தாலும், நாம் நினைக்கிற திசையில் நமது அரசியல் பயணம் இருப்பது இல்லை.

யாருக்கு எந்த பொறுப்பு எப்போது கிடைக்கும் என்பதை நாம் அறியமுடியாது. எனவே கவர்னர் பொறுப்போ அல்லது எந்த பொறுப்பாக இருந்தாலும் கிடைத்த பொறுப்பின் மூலம் நாம் சரியாக சமுதாயத்திற்காக பணியாற்ற வேண்டும். எனது அரசியல் பயணமானது அந்த வகையில் தான் இருந்து வந்திருக்கிறது.

பிரதமர் மோடி மற்றும் ஜனாதிபதி ஆகியோர் தமிழ் மீதும், தமிழகத்தின் மீதும், தமிழ் கலாசாரம், இலக்கியம், பண்பாட்டின் மீது மிகுந்த பற்று வைத்துள்ளனர். அதன் வெளிப்பாடு தான் தமிழகத்தை சேர்ந்த 3 தமிழர்கள் வெவ்வேறு மாநில கவர்னர்களாக பணியாற்றும் அரிய வாய்ப்புகளை பெற்றுள்ளனர். இதற்காக பிரதமர் மோடிக்கும், ஜனாதிபதிக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

பொதுவாக குற்றச்சாட்டு என்பது அரசியலில் இருந்து கொண்டு தான் இருக்கும். அது நியாயமானதும் கூட தான். அந்த குற்றச்சாட்டுகளை எல்லாம் நாம் மனவலிமையோடு மேற்கொண்டால் எல்லாம் காணாமல் போய்விடும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story