நாடாளுமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி? - தே.மு.தி.க. மாவட்ட செயலாளர் கூட்டம் தொடங்கியது


நாடாளுமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி?  - தே.மு.தி.க. மாவட்ட செயலாளர் கூட்டம் தொடங்கியது
x
தினத்தந்தி 7 Feb 2024 5:01 AM GMT (Updated: 7 Feb 2024 5:22 AM GMT)

மாவட்ட செயலாளர்கள் தெரிவிக்கும் கருத்துகளின் அடிப்படையில், கூட்டணி குறித்து முடிவெடுக்க தே.மு.தி.க. தலைமை திட்டமிட்டுள்ளது.

சென்னை,

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் கட்சிகள் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றன.

இந்த நிலையில், நாடாளுமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி வைப்பது என்பது குறித்து, தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் ஆலோசனை நடத்தி வருகிறார். சென்னை கோயம்பேடு தலைமை அலுவலகத்தில் நடைபெற்று வரும் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் அவர்கள் தெரிவிக்கும் கருத்துகளின் அடிப்படையில், கூட்டணி குறித்து முடிவெடுக்க தே.மு.தி.க. தலைமை திட்டமிட்டுள்ளது. ஆலோசனை கூட்டத்தில் 79 மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர்.

கள்ளக்குறிச்சி, விருதுநகர் உட்பட தே.மு.தி.க.வுக்கு வாக்கு வங்கி உள்ள செல்வாக்கு மிக்க 7 தொகுதிகளை தேர்வு செய்துள்ள தே.மு.தி.க., குறைந்தது 4 மக்களவைத் தொகுதிகளும், 1 ராஜ்யசபா பதவியும் அளிக்கும் கூட்டணியில் இணைய திட்டமிட்டுள்ளது. கூட்டணி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு பேச்சுவார்த்தை நிறைவு பெற்றபின் வெளியாகும் என தே.மு.தி.க. தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விஜயகாந்த் இல்லாமல் முதல்முறையாக தே.மு.தி.க. தேர்தலை சந்திப்பதால் சரிவில் இருந்து மீண்டு, மீண்டும் மாநில கட்சி அங்கீகாரத்தை பெற முனைப்பு காட்டி வருகிறது.


Next Story